ஜாமீன் என்பது விதி.. சிறை என்பது விதிவிலக்கு.. PMLA வழக்கிலும் இதுவே நியதி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
டெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்காக இருந்தாலும், ஜாமின் என்பது விதி, சிறை தண்டனை என்பது விதிவிலக்கான நிகழ்வுகளில் மட்டும் தான் என உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் அமலாக்கத்துறை பெறும் வாக்குமூலம் ஆதாரமாக ஏற்கப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மாநில நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கேட்டு பிரேம் பிரகாஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதி விலக்கான நிகழ்வுகளில் மட்டுமே என்பது சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்திற்கும் (PMLA) பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜாமீன் வழங்குவது இரட்டை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மட்டுமே பணமோசடி தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஜாமின் என்பது விதி என்ற அடிப்படைக் கொள்கையை அது மாற்றாது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூட பொதுவான ஜாமின் வழங்க வேண்டும் என்று விதி கூறுகிறது என நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
மேலும், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ், இந்த குற்றங்களில் முதன்மையானவர் அல்ல, அவர் சாட்சியங்களை சிதைக்க வாய்ப்பில்லை எனக் கூறி, பிரேம் பிரகாஷுக்கு 5 லட்ச ரூபாய் ஜாமீன் பத்திர ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அமலாக்கத்துறை விசாரணை அலுவலகத்தில் அளிக்கும் வாக்குமூலங்கள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் இந்திய சாட்சியச் சட்டத்தின் பிரிவு 25ன் கீழ் அத்தகைய வாக்குமூலங்களுக்கு எதிரான தடை பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் அமலாக்கத்துறையால் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு, ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications