வாட்ச்மேன் வேலைக்கு கூட லாயக்கு இல்லை.. சாதி ரீதியாக விமர்சனம்... இண்டிகோ பயிற்சி விமானி புகார்
டெல்லி: பெங்களூரைச் சேர்ந்த பயிற்சி பைலட் ஒருவரை இண்டிகோ விமான நிறுவன சீனியர் அதிகாரிகள், ஒரு வாட்ச்மேன் வேலைக்கு கூட நீ லாயக்கு இல்லை.. நீயெல்லாம் போய் திரும்பவும் செருப்பை தைக்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. பட்டியல் சமூக இளைஞரான பயிற்சி விமானியை திட்டிய குற்றச்சாட்டில் விமான நிறுவன உயர் அதிகாரிகள் மீது எஸ்சி எஸ்டி சட்டம் மற்றும் பிஎன்எஸ் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன தான் படித்தாலும், எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் சாதி ரீதியான விமர்சனங்களை எதிர்கொள்ளாத பட்டியல் சமூகத்தினரை பார்க்க முடியாது. எளிதாக அவர்களை நோக்கி, இடஒதுக்கீட்டில் வந்தவர்கள் என்று கூறி பிரச்சாரம் செய்வதும், அவர்களை வெறுத்து ஒதுக்குவதும், அவர்களை அவமானப்படுத்துவதும் அடிக்கடி நடக்கிறது. சில பகுதிகளில் இதை குற்றம் என்றே உணராத அளவிற்கு மக்கள் இன்னமும் இதனை வெளிப்படையாகவே செய்து வருகிறார்கள். ஆனால் படித்த, நாகரீகமான சமூகமும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவ்வப்போது சந்திக்கிறது. பெங்களூர் பயிற்சி விமானிக்கு உயர் அதிகாரிகளால் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

பெங்களூருவைச் சேர்ந்த 35 வயதான பயிற்சி விமானி போலீசில் அளித்த புகாரின் படி, கடந்த ஏப்ரல் 28ம் தேதி அன்று டெல்லியை அடுத்து குர்கானில் உள்ள இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமையகமான எமார் கேபிடல் டவர் இரண்டில் பிற்பகல் 3.30 மணிக்கு மீட்டிங் ஒன்று நடந்தது. சுமார் அரை மணி நேரம் மீட்டிங் நடந்தது. அதில் எங்களுடைய நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான தபஸ் டே, மனிஷ் சஹானி மற்றும் கேப்டன் ராகுல் பாட்டீல் ஆகியோர் வாய் வார்த்தைகளால் மோசமாக திட்டினார்கள். சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டினார்கள்.
மூன்று அதிகாரிகளும் என்னை பார்த்து "நீ எல்லாம் விமானம் ஓட்ட லாயக்கு அற்றவன், திருப்பவும் செருப்பு தைக்க போகத்தான் வேண்டும்", "இங்கே வாட்ச்மேன் ஆக இருப்பதற்கு கூட உனக்கு மதிப்பு இல்லை" என்று பேசினார்கள். இப்படி என்னை சாதி ரீதியாக பேசுவதும், துன்புறுத்துவதும் முதல்முறை அல்ல..பல முறை இப்படி பட்டியல் சமூக இளைஞரான என்னை துன்புறுத்தினார்கள். நானே இந்த வேலையே வேண்டாம் என்று ராஜினாமா செய்து ஓட வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை இப்படி இழிவாக நடத்தினார்கள். அவர்களுடைய பேச்சுக்கள் எல்லாம் என்னை அவமானப்படுத்தும் வகையில் மட்டுல்ல..ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்த என்னை இழிவுப்படுத்தும் வகையில் இருந்தது.
நியாயமற்ற வகையில் சம்பளக் குறைப்பில் ஈடுபட்டார்கள், மீண்டும் மீண்டும் மறுபயிற்சியில் தள்ளுவது பயணச் சலுகைகளை ரத்து செய்வது, தேவையற்ற நோட்டீஸ் அனுப்பி "தொழில்முறை பழிவாங்கலிலும் ஈடுபட்டார்கள். உயர் அதிகாரிகள் மற்றும் நிறுவனத்திடம் புகார் அளித்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறுவழியின்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது" இவ்வாறு பெங்களூர் பயிற்சி விமானி போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸின் மூன்று அதிகாரிகள் மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் பிஎன்எஸ் ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குர்கான் போலீசார் தெரிவித்தனர்.இதனிடையே குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த இண்டிகோ, எந்தவொரு பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் ஒரு சார்பு நிலையோடு நடப்பதை ஒருபோதும் இண்டிகோ நிறுவனம் சகித்துக் கொள்ளாது என்றும், எங்கள் நிறுவனம் பணியாற்றுவோருக்கு மதிப்புக்குரிய இடமாகவே இருக்கிறது என்றும் கூறியுள்ளது. பெங்களூர் பயிற்சி விமானியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும், நியாயத்தின் பக்கமே நிற்போம் என்றும் இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications