வேகமாக பரவும் H3N2 வைரஸ்..தடுப்பூசி குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த பாரத் பயோடெக் நிறுவனம்
H3N2 வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.
டெல்லி: H3N2 வைரஸ்க்கு எதிராகவும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு இது தொடர்பான தகவலை பிரபல ஆங்கில நாளிதழுக்கு கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.
இன்ஃப்ளூயன்ஸா ஏ என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாகவே வேகமாக பரவுகிறது.
கொரோனா பாதிப்பின் தாக்கத்தில் இருந்து மக்கள் தற்போதுதான் மீண்டும் வரத் தொடங்கியிருக்கும் நிலையில், தற்போது பரவும் H3N2 அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. H3N2- வைரஸ் பாதிப்புக்கு சில உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.

அதீத எச்சரிக்கையுடன் இருக்க..
இந்த வைரஸ் மேல் சுவாச தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுள்ளது. அதாவது காய்ச்சல் மற்றும் இருமலுடன் இணைந்து கடுமையான நிமோனியா மற்றும் சுவாசக் கோளாறு மற்றும் மரணம் கூட ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, உடல்வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை கூடுதல் பொதுவான அறிகுறிகளாகும். சாதாரண காய்ச்சல் போன்ற ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான் இது என்றாலும் ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

H3N2 வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி
H3N2 மட்டுமல்ல, H1N1 மற்றும் அடினோ வைரஸ்கள் உட்பட பிற வைரஸ்களும் தற்போது மக்களிடம் பரவியுள்ளதால், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் நெரிசலான இடங்களுக்கு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடயே, H3N2 வைரஸ்க்கு எதிராகவும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.

நாங்கள் பணியை தொடங்கிவிட்டோம்
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு இது தொடர்பான தகவலை பிரபல ஆங்கில நாளிதழுக்கு கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். கிருஷ்ணா எல்லா மேலும் கூறுகையில், "அடுத்த பெருந்தொற்று காய்ச்சலாகத்தான் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் பணியை தொடங்கிவிட்டோம். பறவைக் காய்ச்சல், பன்றி மற்றும் கோழிகள் மற்றும் மனிதர்களிடம் இருந்து இது நகர்ந்து வருவதை நாங்கள் சொல்லி வருகிறோம்" என்றார். எனினும், இது தொடர்பாக விரிவான தகவல் எதையும் சொல்ல அவர் மறுத்துவிட்டார்.

பாரத் பயோடெக் நிறுவனம்
பாரத் பயோடெக் நிறுவனம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியாவின் ஐ.சி.எம். ஆருடன் இணைந்து கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து இருந்தது. அதேபோல், நாசி வழி தடுப்பு மருந்தான iNCOVACC மருந்தையும் இந்த பாரத் பயோடெக் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. H1N1 வைரஸ்க்கு எதிராகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.












Click it and Unblock the Notifications