மத்திய அரசு மேஜர் முடிவு! ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்திற்கு ஒப்புதல்.. 23 லட்சம் ஊழியர்களுக்கு பலன்
டெல்லி: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) என்ற திட்டத்திற்கு மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை தொடர்பாக மேஜர் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம்: அதாவது, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) என்ற திட்டத்திற்கு மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
யுபிஎஸ் ஓய்வூதிய திட்டம்: இந்த யுபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம், குடும்ப பென்ஷன் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகியவை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தின்படி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக கடைசி 12 மாதங்கள் வாங்கிய அடிப்படை சம்பளத்தின் சராசரியின் 50 சதவிகிதம் வழங்குவதை உறுதி செய்கிறது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு இது கிடைக்கும்.
குடும்ப ஓய்வூதியம் என்பது, அரசு ஊழியர் இறந்ததற்கு பின் அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவிகிதம் குடும்பத்திற்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த புதிய திட்டம் 2004 முதல் ஓய்வு பெற்ற, புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்குவதை உறுதி செய்கிறது. தற்போது இருக்கும் ஓய்வூதிய திட்டத்தின்படி, ஊழியர்கள் 10 சதவிகிதம் பங்களிக்க வேண்டும். அரசின் பங்களிப்பு 14 சதவிகிதம் ஆகும். தற்போதைய யூபிஎஸ் - ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எப்போது அமலுக்கு வரும்?: விரைவில் அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் வரும் 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.












Click it and Unblock the Notifications