அன்று அமித்ஷா கைது... இன்று ப சிதம்பரத்திற்கும் அதே மிரட்டல்.. திகிலடிக்கும் ஒரு பிளாஷ்பேக்
Recommended Video
டெல்லி: 2010ம் ஆண்டு உள்துறை அமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோது அமித்ஷா குஜராத் போலி எண்கவுண்டர் வழக்கில் கைதானார். இதேபோல் இன்று அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ள நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சரான ப சிதம்பரம் கைது செய்யப்படும் நிலையில் உள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தவர் ப .சிதம்பரம். கடந்த 2007ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதியை பெறுவதில் அனுமதி வழங்கியதில் 305 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக சிபிஐக்கு புகார்கள் வந்தது.
இந்த விவகாரத்தில் சிதம்பரம் மீது பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐயும் வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்கில் அவரை கைது செய்ய சிபிஐ தீவிரம் காட்டிய நிலையில் ப சிதம்பரம் முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
முன்ஜாமின் மறுப்பு
ஆனால் சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்ததோடு சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் அவரை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து ப சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு அடிப்படையற்றது என்றோ, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றோ பழிவாங்கும் நடவடிக்கை என்றோ கூற முடியாது என்று நீதிபதி தீர்ப்பில் கூறினார்.
2மணி நேரத்தில் ஆஜராக உத்தரவு
இதையடுத்து ப சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முனைப்பு காட்டி வருகிறது. அவரை 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகம் முன் ஆஜராக வேண்டும் என சிபிஐ உத்தரவிட்டுள்ளது. இதனால் எந்த நேரமும் சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்ற நிலை காணப்படுகிறது.
இன்று காலை தெரியும்
ஏனெனில் நேற்று ப சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க பட்டியலிட முடியாது என்று உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்தார்.இதையடுத்து இன்று காலை உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை ப சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய உள்ளனர். இந்த மனுவை ஏற்று உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கினால் சிதம்பரம் கைதில் இருந்து தப்பிப்பார். இல்லாவிட்டால் கைது ஆவது உறுதியாகும்.
இன்று சிதம்பரம் கைதாக வாய்ப்பு
கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அன்றைக்கு மத்திய உள்துறை அமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோது குஜராத் போலி எண்கவுண்ட்டர் வழக்கில்அமித்ஷா கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இன்று அதே அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் உள்துறை அமைச்சசரான சிதம்பரம் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார். இதுதான் அரசியலில் மிகப்பெரிய டுவிஸ்டாக பார்க்கப்படுகிறது. ப சிதம்பரம் மட்டுமல்ல, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா உள்ளிட்டோரும் சிபிஐயின் வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.