நெருங்கியது பீகார் சட்டசபை தேர்தல்:75 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி..அள்ளி வீசிய பிரதமர் மோடி!
டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அம்மாநில விவசாயிகள் 75 லட்சம் பேருக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் மூலமாக ரூ.1,600 கோடியை வாரி வழங்கி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஜேடியூவும் இடம் பெற்றுள்ளது. ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கடும் போட்டியை உருவாக்கி இருக்கிறது.

இந்த நிலையில், பீகார் மாநிலம் பாகல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையாக ரூ.22,000 கோடியை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, புனித மகா கும்பமேளா காலத்தில் மந்தராச்சல் மண்ணில் காலடி வைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். இது தியாகி தில்கா மஞ்சியின் பூமி; புகழ்பெற்ற பட்டு நகரம்.
விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் பீகாரைச் சேர்ந்த சுமார் 75 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனடைகின்றன; பீகார் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று சுமார் ரூ.1,600 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான நவீன விதை ரகங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் ஏற்க வேண்டிய யூரியா மற்றும் டிஏபிக்கான செலவை மத்திய அரசே ஏற்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசு சுமார் ரூ.12 லட்சம் கோடியை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. இல்லையெனில் விவசாயிகள் தங்கள் சொந்த நிதியைத்தான் இதற்காக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். இது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு கணிசமான தொகையை சேமித்து தந்துள்ளது.
மத்தியில் பாஜக கூட்டணி அரசு தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் பலன்களை அவர்கள் பெற்றிருக்க முடியாது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட ஆறு ஆண்டுகளில், சுமார் 3.7 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. முன்பு அரசுத் திட்டங்களின் முழுப் பலன்களையும் பெறாத சிறு விவசாயிகள் தற்போது தங்களுக்கு உரிய பலன்களைப் பெறுகிறார்கள். இடைத்தரகர்கள் சிறு விவசாயிகளின் உரிமைகளைச் சுரண்டுவது வழக்கம். முந்தைய அரசுகள் ஒதுக்கிய வேளாண் பட்ஜெட்டை விட மத்திய அரசு நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தியுள்ள தொகை மிகவும் அதிகமாக உள்ளது. இதுபோன்ற முயற்சிகளை விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணித்துக் கொண்ட அரசால் மட்டுமே மேற்கொள்ள முடியும். ஊழல் நிறுவனங்களால் மேற்கொள்ள முடியாது.
வெள்ளத்தால் பீகார் இழப்பை சந்தித்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மேற்கு கோசி கால்வாய் ஈஆர்எம் திட்டத்திற்கான ஆதரவு மூலம், மித்திலாஞ்சல் பிராந்தியத்தில் 50,000 ஹெக்டர் நிலம் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் பயனடைவார்கள்.
இன்று மிகவும் சிறப்பான நாள். நாட்டில் 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. தற்போது அந்த இலக்கை அது எட்டியுள்ளது. பீகாரில் 10,000-வது உழவர் உற்பத்தியாளர் அமைப்பு நிறுவப்படுகிறது மகிழ்ச்சி அளிக்கிறது. ககாரியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மக்காச்சோளம், வாழை மற்றும் நெல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் வெறும் அமைப்புகளாக இல்லாமல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முன்னெப்போதும் இல்லாத சக்தியாக திகழும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் சிறு விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க சந்தை ஆதாயங்களை நேரடியாக அணுக உதவுகின்றன. முன்பு கிடைக்காத வாய்ப்புகள் இப்போது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு கிடைக்கின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications