பாஜக ஆட்சிக்கு விதை விதைத்த அத்வானி! பிரதமர், ஜனாதிபதி பதவிகள் கிடைக்காமலே ஓரம் கட்டப்பட்ட துயரம்!
டெல்லி: மத்தியில் இன்றைக்கு பாஜக 3-வது முறையாக ஆட்சி அதிகாரத்தை 'ஹாட்ரிக்'காக அனுபவிக்க விதை போட்ட அக்கட்சியின் பிதாமகன்களில் ஒருவர்தான் எல்.கே. அத்வானி. 1984-ம் ஆண்டு வெறும் 2 எம்பிக்களைப் பெற்ற பாஜகவை 1998-ல் முதல் முறையாக ஆட்சி அமைக்க வைத்ததில் அத்வானியின் பங்களிப்பு மறுக்கவோ மறைக்கவோ முடியாத சரித்திரம்.
அன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவின் சிந்து மாகாணம் கராச்சியில் 1927-ம் ஆண்டு பிறந்தவர் அத்வானி. கராச்சி, அங்குள்ள ஹைதராபாத்தில் கல்வியை முடித்த பின்னர் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானை விட்டு வெளியேறி மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மாநகரில் குடியேறியது அத்வானி குடும்பம். மும்பையில் சட்டக் கல்வியை முடித்தார் அத்வானி.

பள்ளி மாணவராக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில்: கராச்சியில் பள்ளி மாணவராக இருந்த போது அப்போது இந்துக்களிடையே எழுச்சி ஏற்படுத்தியிருந்த புதிய இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.-ல் இணைந்தார். கராச்சியிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழு நேர ஊழியராக பணிபுரிந்தார். இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த காலத்தில் ராஜஸ்தானில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழு நேர பணிக்கு தலைமையால் அனுப்பி வைக்கப்பட்டவர்.
ஜனசங்கத்தில்.. : இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் மூலவேரான ஜனசங்கத்தை ஷியாமா பிரசாத் முகர்ஜி 1951-ல் தொடங்கிய் போது தன்னை இணைத்துக் கொண்டார் அத்வானி. அவரது அதிதீவிரமான இந்துத்துவா கோட்பாட்டு பிடிப்பு ஜனசங்கத்தில் முக்கியமான 'தலை'யாக உருவெடுக்க வவைத்தது. ஜனசங்கத்தின் பொதுச்செயலாளர் பண்டாரியின் செயலர்; பின்னர் டெல்லியில் நாடாளுமன்ற விவகாரங்களின் பொறுப்பாளர் என அத்வானியின் கிராப் ஜனசங்கத்தில் உச்சத்தை தொடுகிறது. 15 ஆண்டுகளில் ஜனசங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார் அத்வானி.
மத்திய அமைச்சர் பதவி: அத்வானியும் வாஜ்பாயுடம் ஜனசங்கம் காலத்தில் இருந்தே இரட்டையர்களாக இணைந்தே செயல்பட்டனர். இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தார். எமர்ஜென்சிக்கு பிந்தைய ஜனதா அரசில் முதல் முறையாக மத்திய அமைச்சரானார் அத்வானி.
பாஜக உதயம்: 1980-ல் பாரதிய ஜனதா கட்சியை வாஜ்பாயும் அத்வானியும்தான் உருவாக்கினர். 1984-ம் ஆண்டு பாஜக முதல் முறையாக லோக்சபா தேர்தலை சந்தித்தது. அப்போது பாஜகவுக்கு வெறும் 2 இடங்கள்தான் கிடைத்தது.
அதிகாரத்தில் பாஜக: 16 ஆண்டுகளிலேயே 1998-ல் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை முதல் முறையாக பாஜக கைப்பற்றியது. இதற்கு காரணம் வாஜ்பாய் தலைமையும் அத்வானியின் அதிதீவிர வியூகங்களும்தான் என்பது மிகையல்ல. இந்துத்துவா கோட்பாடுகளை வென்றெடுக்க ரத யாத்திரைகளை நடத்தி 'ரத யாத்திரை' நாயகனாக இந்திய சரித்திரத்தில் இடம் பிடித்தார். அயோத்தி ராமர் கோவிலுக்காக் அத்வானி நடத்திய முதல் ரத யாத்திரை விபி சிங் ஆட்சியையே கவிழ்த்தது. 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்கும் காரணமாக அமைந்தது. பாபர் மசூதி இடிப்பால்தான் நாடு முழுவதும் மதவன்முறைகள் வெடித்தன. பின்னாளைய குஜராத் வன்முறைகளும் அரங்கேறின. அதேநேரத்தில் அரசியல் ரீதியாக "இந்துக்களின்" கட்சியாக வட இந்தியாவில் பாஜக வேர் பிடித்தது.
துணைப் பிரதமர்: 1998-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் துணைப் பிரதமராகவும் பதவியில் இருந்தார். அத்வானிக்கு பின்னர் இதுவரை துணை பிரதமர் யாரும் நியமிக்கப்படவும் இல்லை. 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.
பிரதமர் வேட்பாளர்: 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அத்வானி. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் அத்வானியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. பாஜகவின் வழிகாட்டுதல் குழு அல்லது முதியோர் குழுவில் சேர்க்கப்பட்டு அத்வானி ஓரம் கட்டப்பட்டார்.
மறுக்கப்பட்ட பிரதமர், ஜனாதிபதி பதவிகள்: நாட்டின் துணை பிரதமராக பதவி வகித்தவர், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்.. அவர் உருவாக்கிய பாஜக அமோக வெற்றியுடன் 2014-ல் அதிகாரத்தை கைப்பற்றிய போது பிரதமர் பதவி அவருக்கு மறுக்கப்பட்டது. சரி நாட்டின் ஜனாதிபதியாக, பாஜக அவரை நியமித்துவிடும் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஜனாதிபதி பதவியும் கூட அத்வானிக்கு கிடைக்காமல் போனது. நாட்டின் உயரிய விருதுகளை மட்டும் வழங்கி தற்போதைய பாஜக அவருக்கு மரியாதை செய்து தன் கடமையை நிறைவேற்றிக் கொண்டது. தாம் விதை ஊன்றி ரதயாத்திரை நடத்தி ரத்தமும் சதையுமாய் வளர்த்த கட்சி விஸ்வரூபமாய் விருட்சமாய் அதிகாரத்தில் வேர்பிடித்து நின்ற போதும் பலனை அனுபவிக்காதவர்தான் எல்.கே. அத்வானி.. இது வரலாற்றின் துயரமே!












Click it and Unblock the Notifications