கொரோனாவை அடுத்து பறவை காய்ச்சல் பீதி... 4 மாநிலங்களில் கடும் பாதிப்பு... தமிழகம் உஷார்!
டெல்லி: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தபட்டுள்ளது.
மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதால் பக்கத்து மாவட்டங்கள் உஷராக உள்ளன.

பறவை காய்ச்சல் ஏற்படுத்தும் பீதி
இந்தியாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சறுத்தி வரும் நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் பறவைக் காய்ச்சலை உறுதிப்படுத்தியுள்ளன.

கேரளாவில் பாதிப்பு
அண்டை மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த சில நாட்களில் பறவை காய்ச்சல் காரணமாக 12,000 வாத்துகள் இருந்துள்ளன. இந்த 2 மாவட்டங்கள் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக அங்கு கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் விரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் உஷார்
''முதல்வருடன் கலந்துரையாடிய பின்னர் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த முடிவு இறுதி செய்யப்பட உள்ளது'' என்று கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜு தெரிவித்தார். ஆனால் கேரளாவின் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பறவை காய்ச்ச்சல் இதுவரை இல்லை. இதனால் இந்த மாநிலங்கள் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளன. கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கிருமிநாசினி உள்ளிட்ட பலத்த சோதனைக்கு பின்னரே வாகனங்களை அனுமதிக்கின்றன.

625 பறவைகள் இறப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பாலான காகங்கள் இறந்ததை அடுத்து பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அங்குள்ள ஜல்வார், கோட்டா மற்றும் பரன் ஆகிய இடங்களில் பறவைகள் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.பறவை காய்ச்சல் காரணமாக செவ்வாய்க்கிழமை வரை 16 மாவட்டங்களில் 625 பறவைகள் இறந்துவிட்டதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

300 காகங்கள் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் 300-க்கும் மேற்பட்ட காகங்களின் திடீர் மரணம் பீதியை ஏற்படுத்தியது. தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களின் நிறுவனத்தில் (என்ஐஎச்எஸ்ஏடி) பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள், இந்தூர் மற்றும் மாண்ட்சரில் இருந்து சில மாதிரிகளில் பறவை காய்ச்சல் வைரஸை ஏற்படுத்தும் எச் 5 என் 8 பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தியது.

வீடு,வீடாக பரிசோதனை
இந்தூரில் ஒரு கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. மேலும் விரைவு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு காகங்கள் திடீரென இறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தூரில் ஏற்கனவே கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் சுகாதாரத் துறை, காகங்கள் இறந்து கிடந்த பகுதிகளில் வசிக்கும் பகுதிகளில் வீடு,வீடாக மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

4 லட்சம் கோழிகள் சாவு
மத்திய பிரதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மகாராஷ்டிரா இதுவரை பறவை காய்ச்சல் பாதிப்பை கண்டறியவில்லை. ஆனாலும் அங்குள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹரியானாவின் பங்குலா மாவட்டத்தில் மட்டும் கடந்த 10 நாட்களில் நான்கு லட்சம் கோழி, பறவைகள் இறந்துள்ளன. ஆனாலும் அங்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்காக ஆய்வும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோழி இறைச்சிக்கு தடை
இமாச்சல பிரதேசம் நான்காவது மாநிலமாக பறவை காய்ச்சலை உறுதிப்படுத்தியது. அங்கு சுமார் 2,700 வாத்துக்கள் உள்ளிட்ட பறவைகள் இறந்து கிடந்தன. காங்க்ரா மாவட்டத்தில் கோழி இறைச்சி விற்பனை, கோழி பண்ணைகள் கொள்முதல், ஏற்றுமதி, முட்டை விற்பனை, மீன் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பொருட்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களும் பறவை காய்ச்சல் வராதபடி முன்னெச்சிரிக்கை நடவடிக்கையை தீவிரமாக எடுத்து வருகின்றன .












Click it and Unblock the Notifications