வித்தியாசத்தை கவனிச்சீங்களா! தர்மயுத்த நாயகனை கழற்றிவிட்டதா தாமரை தலைமை?
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தங்கர் வேட்புமனுத் தாக்கலின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த தம்பிதுரை உடன் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் யாரும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்டு 6 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

வேட்புமனுத் தாக்கல்
அதேபோல் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து இன்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், மத்திய வேளாந்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் இந்த வேட்புமனுத் தாக்கலின்போது உடன் இருந்தனர்.

தம்பிதுரை, ஜி.கே.வாசன்
அவர்களுடன் கூட்டணி கட்சியான இந்திய குடியரசு கட்சி (ஏ) வின் தலைவரும் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, அதிமுக மூத்த தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் இந்த வேட்புமனுத் தாக்கலின்போது உடன் இருந்தனர். ஆனால், இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இல்லை
இதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமெடுத்ததை தொடர்ந்து எடப்பாடி தரப்பில் தம்புதுரையையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவரையும் அவரது மகன் ரவீந்திரநாத்தையும் அழைத்திருந்தது பாஜக தலைமை. அப்போது பாஜகவை முழுமையாக நம்பி இருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

பாஜக நிலைபாடு
ஆனால், கடந்த 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் அவரது மகன்கள், ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலையோ எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். தற்போது இந்த வேட்புமனு தாக்கல் நிகழ்வுக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அழைக்கப்படாது அதிமுக இரட்டைத் தலைமை விவகாரத்தில் பாஜகவின் நிலைபாட்டை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications