ராஜ்யசபாவில் தனி பெரும்பான்மையை நெருங்கும் பாஜக! ஆம்ஆத்மி எம்பிக்களால் பலம்பெற்ற ‘தாமரை'
டெல்லி: ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா, ஹர்பஜன் சிங் உள்பட 7 ராஜ்யசபா எம்பிக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால் ராஜ்யசபாவில் பாஜகவுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. அதோடு ராஜ்யசபாவில் தனிப்பெரும்பான்மையை பாஜக நெருங்கி வருகிறது. இதனால் பாஜகவினர் ஹேப்பியாகி உள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை. இதனால் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பாஜக மத்திய அரசை நடத்தி வருகிறது. அதேபோல் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மையும் இல்லை. அரசியல் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றால் சபையில் 3ல் 2 பங்கு எம்பிக்களின் ஆதரவு வேண்டும். இது பாஜக கூட்டணிக்கு இருசபைகளிலும் இல்லை.

இதனால் தான் சமீபத்தில் லோக்சபாவில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு அரசியல் சட்ட திருத்த மசோதா, மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களின் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா ஆகியவை எதிர்க்கட்சிகளால் லோக்சபாவில் தோற்கடிக்கப்பட்டது. இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் கூட ராஜ்யசபாவில் தோற்கடிக்கப்பட்டு இருக்கும். ஏனென்றால் அங்கும் பாஜக கூட்டணிக்கு 3ல் 2பங்கு எம்பிக்களின் ஆதரவு இல்லை.
பாஜகவில் ஆம்ஆத்மியின் 7 எம்பிக்கள்
இந்நிலையில் தான் தற்போது பாஜக ராஜ்யசபாவில் தனிப்பெரும்பான்மையையும், அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு தேவையான 3ல் 2பங்கு எம்பிக்களின் ஆதரவையும் நெருங்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆம்ஆத்மியில் இருந்து பாஜகவில் சேர்ந்துள்ள 7 எம்பிக்கள் தான் முக்கிய காரணம்.
ஆம்ஆத்மி கட்சியின் பிரபலமாக இருந்த ராஜ்யசபா எம்பிக்களாக இருக்கும் ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், முன்னாள் கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ராஜிந்தர் குப்தா, விக்ரம் சானே, ஸ்வாதி மாலிவால் உள்ளிட்டோர் ஆம்ஆத்மியில் இணைந்துள்ளனர். இதில் ஸ்வாதி மாலிவால் மட்டும் டெல்லியில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்வானவர். மற்ற 6 பேரும் பஞ்சாப்பில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்வானவர்கள் ஆவார்கள்.
தனிமெஜாரிட்டியை நெருங்கும் பாஜக
ராஜ்சபாவை எடுத்து கொண்டால் மொத்தம் 250 இடங்கள் உள்ளன. இதில் நியமன எம்பிக்களும் அடங்குவர். தற்போது 244 எம்பிக்கள் மட்டுமே இருக்கின்றனர். 6 இடங்கள் காலியாக உள்ளன. இந்த 244 எம்பிக்கள் அடிப்படையில் பார்த்தால் மெஜாரிட்டிக்கு 123 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் பாஜகவுக்கு 106 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். தற்போது 7 ஆம்ஆத்மி எம்பிக்கள் இணைந்துள்ளனர். இதனால் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் தனி மெஜாரிட்டிக்கு பாஜகவுக்கு இன்னும் 10 எம்பிக்கள் தான் தேவையானதாக உள்ளது.
இதற்கிடையே தான் வரும் மே மாதம் 23 இடங்களும், நவம்பர் மாதம் 11 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதற்கான தேர்தல் வரும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் பாஜகவுக்கு 10 எம்பிக்கள் வரை கிடைத்தால் எளிதாக அந்த கட்சி ராஜ்யசபாவில் மெஜாரிட்டியை பெற்று விடும்.
3ல் 2 பங்கு மெஜாரிட்டி எப்படி?
அதேபோல் ராஜ்யசபாவில் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற 3ல் 2பங்கு எம்பிக்களின் ஆதரவு வேண்டும். அதன்படி பார்த்தால் தற்போயைத சூழில் 163 எம்பிக்கள் வேண்டும். ஆனால் பாஜகவுக்கு 106 எம்பிக்கள் மட்டுமே உள்ளன. கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு 5 எம்பிக்கள், ஐக்கிய ஜனதாதளத்துக்கு 4 எம்பிக்கள் உள்பட மொத்தமாக கூட்டணி கட்சிகளுக்கு 33 பேர் உள்ளனர். இதனால் பாஜக கூட்டணிக்கு மொத்தம் 139 பேர் உள்ளனர்.
இப்போது ஆம்ஆத்மி கட்சியின் 7 எம்பிக்கள் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர். இவர்களை சேர்த்தால் பாஜகவின் மொத்த பலம் 146 ஆக அதிகரிக்கும். இதனால் 3ல் 2 பங்கு மெஜாரிட்டிக்கு பாஜகவுக்கு இன்னும் 19 எம்பிக்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இதனால் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் தொடர்பான வாக்கெடுப்புகளுக்கு தேவைப்படும் 3ல் 2பங்கு பெரும்பான்மையை அடைவதில் ராஜ்யசபாவில் பாஜக கூட்டணி வலுவாகி வருகிறது. இருப்பினும் இன்னும் 17 பேரின் ஆதரவு தேவையாக உள்ளது.
தகுதி நீக்க கோரிக்கை
இதற்கிடையே தான் தான் ஆம்ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான 7 ராஜ்யசபா எம்பிக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி சார்பில் ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
தகுதி நீக்க முடியாது?
இதற்கிடையே தான் 7 எம்பிக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதாவது ஆம்ஆத்மி கட்சியில் மொத்தம் 10 பேர் ராஜ்யசபா எம்பிக்களாக உள்ளனர். இதில் 7 பேர் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர். இது ஆம்ஆத்மியின் மொத்த எம்பிக்களின் எண்ணிக்கையில் இது 3ல் 2பங்கிற்கு அதிகமாகும். இதனால் கட்சி மாறிய 7 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படாமல் பாஜகவில் எம்பியாக தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கும் ராஜ்யசபா தலைவராக இருக்கும் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் ஒப்புதல் தேவை. இந்த ஒப்புதலை பாஜக எளிதில் பெற வாய்ப்புள்ளது. இதனால் ராஜ்யபசாவில் பாஜக கூட்டணிக்கான எம்பிக்களின் ஆதரவு அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications