லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பாஜக.. வாட்ஸ்அப் குரூப்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டம்
Recommended Video
டெல்லி : நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு எம்பி தொகுதியிலும். பாஜக தொண்டர்கள் அங்குள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் வகையில் வாட்ஸப் குரூப்கள் ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனை எதிர்கொள்வது தொடர்பான வியூகங்களை பாஜக அமைத்து வருகிறது. தற்போது வாட்ஸப் குரூப்களை அமைத்து அதன் மூலமாக பிரசாரங்களை மேற்கொள்வதற்கு பாஜக திட்டமிட்டிருக்கிறது.
இதுகுறித்து டெல்லியில் தொகுதிகளின் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் லால் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், ''தொடர் சங்கிலி போன்ற வாட்ஸப் குரூப்கள் ஏற்படுத்தப்படும். இந்த ஒவ்வொரு குழுவிலும் முக்கிய தலைவர்கள் இடம் பெறுவார்கள்.
ஜனவரிக்குள் இந்த பணி முடிவடைந்து விடும். அதன் பின்னர் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பாஜக தொண்டர்கள் அங்குள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும்'' என்றார்.
பூத் கமிட்டி கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா உள்பட மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது, ஒவ்வொரு தொண்டர்களும், குறைந்தது 10 குடும்பங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், வாரம் ஒருமுறை இவ்வாறு செய்யும்போது குறைந்தது 25 லட்சம் புதிய குடும்பங்களிடம் ஆதரவு திரட்ட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதி, பகுதியில் உள்ள சக்திவாய்ந்தவர்களின் விவரங்களையும் தொண்டர்களிடம் பாஜக கேட்டிருக்கிறது. முந்தைய தோல்விக்கான காரணங்கள் குறித்து பூத் பொறுப்பாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், வரும் தேர்தல்களில் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.