எதிர் கருத்து சொல்வோர் தேச விரோதிகள் அல்லர்.. மெளனம் கலைத்த அத்வானி
Recommended Video

டெல்லி: தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, முதன்முறையாக மௌனத்தை கலைத்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை அத்வானியுடன் இணைந்து முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 1984ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஆரம்பித்தார். இதையடுத்து பாஜக நிறுவப்பட்ட தினம் ஏப்ரல் 6ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கடிதம் எழுதியுள்ளார்.
மோடியும் அமித்ஷாவும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை தேச விரோதிகள் என கூறிவரும் நிலையில், இதற்கு பதிலடி தரும் விதமாக அத்வானி தனது பிளாக்கில் எழுதியுள்ளார். அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை ஒருபோதும் பாஜக தேசவிரோதிகளாக எண்ணியதில்லை என அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

ஆலோசகர்கள்
முதலில் தேசம், அடுத்துதான் கட்சி, அடுத்துதான் சொந்த நலன் என குறிப்பிட்டு அத்வானி தனது பிளாக்கில் எழுதியுள்ள கடிதத்தில், "பன்முகத்தன்மை மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு மரியாதை அளிப்பதே இந்திய ஜனநாயகத்தின் சாரம்சம் ஆகும். ஆரம்பத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி, அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்கொண்டவர்களை எதிரிகளாக கருதியது இல்லை. ஆனால் அவர்களை நாங்கள் ஆலோசனை கூறுபவர்களாகவே கருதுகிறோம்.

விரும்பும் அரசியல்
இதேபோல் அரசியல் ரீதியாக வேறுபாடுகளைக் கொண்டவர்களை நாங்கள் ஒரு போதும் தேச விரோதிகளாக கருதியது இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட முறையில் விரும்பும் அரசியலை தேர்வு செய்வதற்கு பாரதிய ஜனதா ஆரம்பத்தில் இருந்தே உறுதி அளித்துள்ளது.

ஜனநாயகம்
கட்சிக்குள்ளும் மற்றும் தேசிய அளவிலும் ஜனநாயகத்தையும் ஜனநாயக மரபுகளையும் பாதுகாப்பது தான் பாஜகவின் பெருமைமிக்க அடையாளமாக உள்ளது,

தேர்தல் பண்டிகை
தேர்தலோ ஜனநாயகத்தின் உண்மையான பண்டிகையாகும். இதுவே மக்களின் நேர்மையான சிந்தனைக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம் ஆகும்" இவ்வாறு அத்வானி தனது கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா போட்டி
பாஜகவை ஆரம்பித்து, 6 முறை காந்தி நகரில் வென்ற அத்வானிக்கு இந்த முறை மக்களவை தொகுதியில் போட்டியிட சீட் ஒதுக்கப்படவில்லை. அந்த தொகுதியில் தான் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார். மூத்த தலைவர்கள் பலரும் ஓரம் கட்டப்பட்ட நிலையில் முதுபெரும் தலைவரான அத்வானியும் இப்போது ஓரம் தள்ளப்பட்டு விட்டார். இந்த நிலையில் இப்படி ஒரு கருத்தை அத்வானி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications