ஸ்டாலின் பேச்சு.. பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனதா? குஷியில் பாஜக.. குழப்பத்தில் காங்கிரஸ்
Recommended Video
டெல்லி: சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் தோல்வியை சந்தித்த பாஜகவிற்கு இப்போது நடைபெற்று வரும் சில முக்கிய நிகழ்வுகள் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டது போன்று மகிழ்ச்சியை கொடுப்பதாக உள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தங்கள் கைவசம் இருந்த ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுத்துள்ளது பாஜக.
தங்களுக்கு பலம் வாய்ந்த பகுதிகள் என்று கருதப்பட்ட இந்தி பேசும் மக்களின் முக்கிய மாநிலங்களை, அந்த கட்சி இழந்துள்ளது, அதன் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
மகிழ்ச்சி
ஆனால் இதன் பிறகு நடைபெற்று வரும் சில முக்கியமான நிகழ்வுகள், இழந்த மகிழ்ச்சியை பாஜக தலைவர்களுக்கு திருப்பி கொடுத்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியான முதல் முக்கியமான நிகழ்வு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தது. மோடி எதிர்ப்பை மையமாக கொண்டு நட்பு பாராட்டிய பல்வேறு கட்சிகளும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த எதிர்ப்பு வெளிப்படுத்தியுள்ளனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பகிரங்கமாகவே தங்கள் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.
பதவியேற்பு புறக்கணிப்பு
ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு அடுத்த நாள் நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநில முதல்வர்களின் பதவி ஏற்பு விழாவை மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றோர் புறக்கணித்துவிட்டனர். ஆனால், சில மாதங்கள் முன்பு, கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்ற போது இவர்கள் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டனர். இப்போது, இவர்களின் நடுவே விரிசல் ஏற்பட காரணம், ஸ்டாலின் பேச்சு என்று கூறப்படுகிறது. இவ்வாறு எதிர்க்கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது பாஜகவிற்கு வடை பாயாசம் இருந்து சாப்பிட்டதைப் போல உள்ளது.
குழப்பத்தால் குஷி
எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவை எதிர்க்காமல் தனித்தனியாகப் போட்டியிட்டால் வாக்குகள் சிதறி அடுத்த லோக்சபா தேர்தலிலும் பாஜக எளிதாக வெற்றி பெறும் என்பது இந்த மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம். பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வலுவானதாக உள்ளது. அவற்றால் ஒட்டுமொத்தமாக பாஜகவை எதிர்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறி. இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதையே விமர்சனம் செய்து பாஜக பிரச்சாரம் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பிரதமர் வேட்பாளால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பாஜக அறுவடை செய்வதற்காக காத்திருக்கிறது.
திமுகவிற்கு நல்லது
காங்கிரசை மகிழ்விக்கவும், காங்கிரசுடன்தான் திமுக கூட்டணி என்பதை வெளிப்படுத்தவும், ஸ்டாலின் பேச்சு உதவியிருக்கலாம். ஆனால், காங்கிரசுக்கு இதனால் நஷ்டம்தானே தவிர, லாபம் இல்லை என்பதை எதிர்க்கட்சி கூட்டணிக்குள் நிலவும் குழப்பம் வெளிப்படுத்துகிறது.