தேர்தல் பத்திரங்கள் மூலம் டொனேஷனை அள்ளிய பாஜக! அடேங்கப்பா இத்தனை கோடியா!
டெல்லி: மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, கடந்த 2022-2023ம் ஆண்டைவிட 2023-2024ம் ஆண்டு அதிக நிதியை பெற்றிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 2023-2024ம் ஆண்டில் பாஜக அதிக நன்கொடையை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, பாஜக 2022-2023ல் ரூ.2,120.06 கோடியையும், 2023-2024ம் ஆண்டில் ரூ.3,967.14 கோடியையும் நன்கொடையாக பெற்றிருக்கிறது. இது 87% உயர்வாகும். மொத்த நிதியில் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 43% நன்கொடையை பெற்றிருக்கிறது.

2023-2024ம் ஆண்டில் பாஜக பெற்ற மொத்த நிதியில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே சுமார் 43% நிதி கிடைத்திருக்கிறது. அதாவது ரூ.1,685.62 கோடியை பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றிருக்கிறது. இதே 2022-2023ம் ஆண்டில் ரூ. 1,294.14 கோடியை பாஜக பெற்றிருக்கிறது. அந்த ஆண்டு பாஜகவுக்கு வந்த மொத்த நிதியில், தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த நன்கொடை 61% ஆகும்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதற்கு முந்தைய ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அதிக நிதியை பெற்றிருந்தது. அப்படி இருந்தும் லோக்சபா தேர்தல் நடந்த ஆண்டில் ஏன் பத்திரங்கள் மூலம் வரும் நிதி குறைந்தது என்று கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான காரணம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுதான்.
அதாவது தேர்தல் பத்திரங்கள் சட்டத்திற்கு விரோதமானவை என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் அதிரடியாக அதை தடை செய்தது. எனவே பாஜகவால் 2024 பிப்ரவரிக்கு பின்னர் தேர்தல் பத்திரங்கள் மூலம் டொனேஷனை பெற முடியவில்லை.
செலவுகளை பொறுத்த வரையில், 2022-2023ம் ஆண்டில் ரூ.1,092.15 கோடியாக இருந்திருக்கிறது. அதே நேரம், தேர்தல் ஆண்டான 2023-2024ல் ரூ.1,754.06 கோடியை பாஜக செலவு செய்திருக்கிறது. இதில் ரூ.591.39 கோடி விளம்பரங்களுக்காக மட்டுமே செலவு செய்திருக்கிறது. பாஜக மட்டும்தான் அதிக நிதியை பெற்றிருக்கிறதா? என்று கேட்டால் அதுதான் இல்லை. பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடையை பெற்றிருக்கிறது.
அதாவது 2022-2023ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.268.62 கோடி நன்கொடையாக வந்திருக்கிறது. இதே 2023-2024ம் ஆண்டில் இந்த நன்கொடையை ரூ.1,129.66 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது முந்தைய ஆண்டைவிட 320% அதிகமாகும்.
2022-2023ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடைகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.171.02 கோடியை காங்கிரஸ் பெற்றிருந்த நிலையில், 2023-2024ல் இந்த நன்கொடை ரூ. 828.36 கோடியாக ஆதிகரித்தது. இது முந்தைய ஆண்டை விட 73% அதிகமாகும். செலவுகளிலும் இந்த வேறுபாடுகள் இருக்கின்றன. அதாவது 2022-2023ல் ரூ.192.55 கோடியை செலவு செய்த காங்கிரஸ், 2023-2024ல் ரூ.619.67 கோடியை வாரி இறைத்திருக்கிறது.
இதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரு ரூபாய் கூட பெறாத கட்சியாக சிபிஎம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications