ஈ, காக்கை கூட இல்லை.. வெறிச்சோடியது டெல்லி பாஜக தலைமையகம்!
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
டெல்லி: அப்படி ஒரு "டல்" அடிக்கிறது பாஜக தலைமை ஆபீஸ்!
புதுடெல்லியில் 6 ஏ, தீன்தயாள் உபாத்யா மார்கில் தான் பாஜக தலைமை அலுவலகம் உள்ளது. மோடி பதவிக்கு வந்த நாளில் இருந்தே இந்த அலுவலகத்தில் அப்படி ஒரு கூட்டம் வழிந்து நிறையும்.
எங்கெங்கிருந்தோ பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் கிளம்பி இங்கு வந்து விடுவார்கள். அதுவும் தேர்தல் சமயங்களில் சொல்ல வேண்டாம். விடிகாலையிலேயே லைன் கட்டி நிற்பார்கள்.
ஆரவாரம்
மோடி ஆட்சியின்போதே நிறைய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஆஹா ஓஹோவென வெற்றி இல்லாவிட்டாலும் ஓரளவு வெற்றியை பெற்று ஜஸ்ட் பாஸ் ஆனது. ஆனால் இதற்கே பாஜக தொண்டர்கள் தலைமை அலுவலகம் முன்பு கூடி நின்று ஆரவாரம் செய்வார்கள்.
நிசப்தம்
இன்னைக்கு நிலைமை அப்படி இல்லை. தலைமை அலுவலகமே வெறிச்சோடி இருக்கிறது. பட்டாசு சத்தம் இல்லை, முழக்கங்கள் இல்லை, பெரிய அளவில் தொண்டர்கள் படையும் இல்லாமல் நிசப்தமாக உள்ளது.
தமிழக பாஜக அலுவலகம்
கட்சி தலைவர்கள் எல்லாம் ஒருபுறம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தாலும், தொண்டர்கள் இல்லாதது தலைமை அலுவலகம் களை இழந்தே காணப்படுகிறது. டெல்லி தலைமை ஆபீஸே இப்படி என்றால் தி.நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகம் இன்னும் மோசம். பெயருக்கு கூட ஒரு ஆளை காணோம்.
சத்திய மூர்த்தி பவன்
ஆனால் இதற்கு நேர் எதிராக இருக்கிறது சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம். சத்திய மூர்த்தி பவன் வெளிப்புறம் பார்க்கவே களை கட்டுகிறது. காங்கிரஸ் கரைவேட்டி தலைகள் எக்கச்சக்கமாக காலையிலேயே குவிந்து விட்டனர். ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக வெளியாக அனைவர் முகத்திலும் பூரிப்பு.
பளிச் - திருநாவுக்கரசர்
இன்னும் கொஞ்சம் நேரம் ஆனதும் பட்டாசே வெடிக்க ஆரம்பித்து விட்டனர். திருநாவுக்கரசர் வெள்ளை வேட்டி சட்டை, கூலிங் கிளாஸ் சகிதம் பளிச்சென வந்தார். சத்திய மூர்த்தி பவன் வாசப்படியிலேயே பட்டாசுகளை நிர்வாகிகள் கொளுத்த அதனை அருகில் நின்று ரசித்து பார்த்தார் திருநாவுக்கரசர்.