"பாஜக பயங்கரவாதிகளின் கட்சி".. எங்களை பற்றி பேச மோடிக்கு தகுதியில்லை.. கார்கே கடும் கோபம்
டெல்லி: பாஜக என்பது பயங்கரவாதிகளின் கட்சி. அந்த கட்சியில் இருந்து கொண்டு காங்கிரஸை குற்றம்சாட்டி பிரதமர் மோடிக்கு எந்த தகுதியும் இல்லை என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் மற்றும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேசும்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி நகர்புற நக்சல்களுக்கான கட்சி. நகர்புற நக்சலைட்டுகள் தான் கட்சியை நடத்துகின்றனர் என்று தொடர்ந்து கூறி வருகிறார். மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி அங்கு தொடங்கி வைத்தார்.
மேலும் கடந்த 5ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பிராந்தியத்தில் வாஷிம் பகுதியில் பிரதமர் மோடி பேசும்போது, ‛‛காங்கிரஸ் கட்சியை நகர்புற நக்சல்கள் தான் கட்டுப்படுத்துகின்றனர். அவர்களின் மோசமான கொள்கைகளை வீழ்த்த அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்'' என கூறியிருந்தார். இதற்கு அவ்வப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பாஜக பயங்கரவாதிகளின் கட்சி என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: மோடி எப்போதும் காங்கிரஸ் கட்சியின் மீது நகர்புற நக்சல்கள் என்ற லேபிளை ஒட்டுகிறார். இது அவருடைய பழக்கமாகவே மாறிவிட்டது.
ஆனால் அவரது கட்சியான பாஜக எப்படி இருக்கிறது?. பாஜக என்பது பயங்கரவாதிகளின் கட்சி. கொலைகளில் ஈடுபடுகிறது. இதுபோன்ற கட்சியில் இருந்து கொண்டு எங்களை பற்றி பேச மோடிக்கு எந்த தகுதியும் இல்லை'' என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications