ஹெலிகாப்டரில் பணத்தை கடத்தினார்கள்.. பணமதிப்பிழப்பால் பாஜகவிற்கு லாபம்.. கபில் சிபல் பரபர வீடியோ!
பணமதிப்பிழப்பு மூலம் பாஜக கட்சி எப்படி பலன் அடைந்தது, எப்படி கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றியது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
டெல்லி: பணமதிப்பிழப்பு மூலம் பாஜக கட்சி எப்படி பலன் அடைந்தது, எப்படி கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றியது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மூலம் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களான 500 மற்றும் 1000 செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை- டிமானிடைசேஷன் என்று இது அழைக்கப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிக்கவும், இணைய பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இந்த நடைமுறை கொண்டு செயல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ரா அமைப்பை சேர்ந்த அதிகாரி ராகுல் என்பவர் இதில் பணமதிப்பிழப்பு நீக்கம் குறித்து பேசுகிறார்.
என்ன வீடியோ
இந்த வீடியோவில் பணமதிப்பிழப்பு நீக்கத்தின் போது எப்படி பணம் மாற்றம் செய்யப்பட்டது. கோடீஸ்வரர்கள் எப்படி பணம் மாற்றி பலன் அடைந்தார்கள் என்று அதிகாரி ராகுல் மூலம் விளக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வீடியோவை வெளியிட்ட பின் கபில் சிபல் செய்தியாளர்களிடம் அதுகுறித்து விளக்கினார்.
அமித் ஷா தலைமையில்
கபில் தனது பேட்டியில், இந்த மோசடியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேரடியாக சம்பந்தப்பட்டு இருக்கிறார். அவரது தலைமையில்தான் பணம் கோடிக்கணக்கில் மாற்றப்பட்டு இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை. பணத்தை மாற்ற உதவிய ரா அதிகாரியே ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
எப்போது நடந்தது
இந்த சம்பவம் சரியாக பணமதிப்பிழப்பு நீக்கம் செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து டிசம்பர் 31ல் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும். பணக்காரர்களின் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டு இருக்கிறது. வங்கிக்கு கொண்டு செல்லாமலே பணம் மாற்றப்பட்டுள்ளது.
எப்படி நடந்தது
பா.ஜ.க அமைச்சர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் பணம்தான் இது. இந்த பணம் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் உத்தரப்பிரதேசம் வந்துள்ளது. ஹின்டான் விமானப்படை தளத்தில் இருந்து பின் ஆர்பிஐக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பின் அங்கு பணம் மொத்தமாக முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது என்று கபில் சிபல் விளக்கி உள்ளார்.
நிறைய பேர் இருக்கிறார்கள்
இதற்காக அமித் ஷா தலைமையில் மத்திய அரசு அதிகாரிகளின் 26 பேர் கொண்ட குழு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும் கபில் சிபல் கூறியுள்ளார். இதில் சில வங்கிகள் நேரடியாக ஈடுப்பட்டு பணம் மாற்றிக் கொடுக்க உதவி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக பலன்
35-40 சதவிகிதம் கமிஷன் தொகை பாஜகவால் பெறப்பட்டுள்ளது. 15 சதவிகித கமிஷன் இடையில் சில நபர்களுக்கு சென்றுள்ளது. இதன் மூலம்தான் பாஜக தற்போது இவ்வளவு பெரிய பணக்கார கட்சியாக மாறி இருக்கிறது. மொத்த சிஸ்டத்தையும் பாஜக ஏமாற்றி இருக்கிறது என்று கபில் சிபல் கூறியுள்ளார்.
முன்பே அடிக்கப்பட்ட நோட்டுகள்
இதை எல்லாம் விட இந்த 2000 ரூபாய் பணம் ஏற்கனவே ஆர்பிஐ மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு 3 மாதங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்டு தயாராகி இருந்தது. சரியான நேரத்தில் பணக்காரர்கள் பணம் கொடுக்கும் போது கமிஷன் வாங்கி கொண்டு அந்த பணம் கைமாற்றப்பட்டு இருக்கிறது என்று கபில் சிபில் கூறியுள்ளார்.