பாஜக-ஆம் ஆத்மி சண்டையை பாருங்க.. பஞ்சாப் போலீஸ் கைதுசெய்த பாஜக பிரமுகருக்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு
டெல்லி: ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த பாஜக பிரமுகர் தஜிந்தர் பால் சிங் பக்காவை பஞ்சாப் போலீஸ் கைது செய்த நிலையில் அவரை டெல்லி போலீஸ் மீட்டு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது.
டெல்லியை சேர்ந்தவர் தஜிந்தர் பால் சிங் பக்கா. பாஜக மாநில செய்தித்தொடர்பாளரான இவர் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
குறிப்பாக காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு எதிரான அர்விந்த் கெஜ்ரிவாலின் கருத்தை காட்டமாக விமர்சித்து இருந்தார்.
தஜிந்தர் பால் கைது
இந்த நிலையில், அவர் மதவெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், குற்ற உள்நோக்கத்தோடும் கருத்துக்களை தெரிவித்ததாக பஞ்சாபின் மொகாலி மாவட்ட சைபர் பிரிவு காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று பஞ்சாப் போலீஸ் டெல்லிக்கு சென்று பக்காவின் இல்லத்தில் அவரை கைது செய்தது.
பாஜகவினர் போராட்டம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பாஜக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி அரசு கருத்துரிமைக்கு எதிராக நடந்துகொள்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் தஜிந்தர் சிங் பக்காவை அழைத்துக்கொண்டு பஞ்சாப் மாநிலம் மொஹாலிக்கு பஞ்சாப் போலீசார் சென்றுகொண்டிருந்தனர்.
டெல்லி, அரியானா போலீஸ்
குருக்ஷேத்ரா நெடுஞ்சாலை அருகே சென்றுகொண்டிருந்த பஞ்சாப் போலீசாரின் காரை தடுத்து நிறுத்திய அரியானா மாநில போலீஸ், டெல்லி போலீசுக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து அங்கு விரைந்த டெல்லி போலீசார், தஜிந்தர் சிங் பக்காவை மீட்டு டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவரை கடத்திச் சென்றதாக பஞ்சாப் போலீசார் மீதே டெல்லி போலீஸ் வழக்கு ஒன்றையும் பதிவு செய்து இருக்கிறது.
ஆபாசமான நச்சுக் கருத்து
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி தலைவர்கள், 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் பக்கா விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரிவித்துள்ளனர். எந்த பாரபட்சமும் இன்றி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் பரத்வாக், "தஜிந்தர் சிங் பக்கா ஆபாசமான, நச்சுக்கருத்துக்களை வெறுக்கத் தக்க மொழியில் பரப்பி வருபவர்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
பாஜக, பக்கா தந்தை விளக்கம்
இதுகுறித்து டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டால் கூறுகையில், "50 க்கும் மேற்பட்ட போலீசார், பக்காவின் டெல்லி இல்லத்துக்குள் இன்று காலை 8:30 மணிக்கு புகுந்து கைது செய்து இருக்கிறார்கள். அப்போது அவர் டர்பன் கூட அணிந்திருக்கவில்லை." என்றார். ஆனால், பக்காவின் தந்தையோ "10-15 போலீசார் வீட்டுக்குள் புகுந்து தனது மகனை தாக்கி தரதரவென இழுத்துச் சென்றனர். அதை வீடியோ எடுக்க முயன்றபோது அவரது 2 செல்போன்களையும் பரித்துக்கொண்டனர்." என்றார்.
பஞ்சாப் போலீஸ் கடிதம்
இதுகுறித்து அரியானா காவல்துறைக்கு பஞ்சாப் போலீஸ் எழுதியுள்ள கடிதத்தில், இது கடத்தல் இல்லை என்றும், தங்கள் போலீஸ் வாகனத்தை நிறுத்தி பக்காவை மீட்டது தேவையற்றது எனவும் தெரிவித்துள்ளது. பக்கா கைது தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள பஞ்சாப் காவல்துறை, டெல்லி ஜனகாபுரி காவல் நிலையத்தில் இதுகுறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும் விளக்கியுள்ளது.
டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு
டெல்லி போலீசாரால் மீட்கப்பட்ட தஜிந்தர் பால் பக்கா பத்திரமாக மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார். அவரை என்னேரம் வேண்டுமானாலும் பஞ்சாப் போலீஸ் மீண்டும் கைது செய்யலாம் என்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.