ஆப்கான், பாகிஸ்தான் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுத்தீங்களா? மலாலாவுக்கு பாஜக கேள்வி
டெல்லி: ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுத்தீர்களா? என்று பெண்ணிய செயற்பாட்டாளர் மலாலா யூசுப்சாயிடம் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு ஆஜராகும் வக்கீல் காங்கிரஸ் பிரமுகர்: பாஜக குற்றச்சாட்டு! வழக்கறிஞர் பதிலடி
முஸ்கானின் முழக்கம்
இந்நிலையில் கர்நாடகாவின் ஹாசன் அரசு கல்லூரிக்கு நேற்று ஹிஜாப் அணிந்து முஸ்கான் என்ற மாணவி சென்றார். முஸ்கானை சூழ்ந்து கொண்ட இந்துத்துவா அமைப்பினர் ஜெய்ஶ்ரீராம் என முழக்கமிட்டனர். ஆனால் முஸ்கான் அஞ்சவில்லை. அத்தனை பேர் திரண்டிருந்த இந்துத்துவா கூட்டத்தின் முன் தைரியமாக நின்று தனி ஒரு பெண்ணாக அல்லாஹ் அக்பர் என பதில் முழக்கமிட்டார்.
முஸ்கானுக்கு பாராட்டு
இந்துத்துவா கூட்டத்தினரை தெறிக்கவிடும் வகையில் அல்லாஹ் அக்பர் என முழக்கமிட்ட முஸ்கான் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார். முஸ்கான் முழக்கமிடும் வீடியோ உலகம் முழுவதும் பெட்ரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற யூசுப் மலாலாவும் தமது ட்விட்டரில் முஸ்கானை பாராட்டி பதிவிட்டிருந்தார். அதில், கல்லூரிகள் எங்களை கல்வியா? ஹிஜாபா? என்று தேர்வு செய்யும் நிலைமைக்குத் தள்ளுகிறது. ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்கள் செல்ல அனுமதி மறுப்பது அச்சுறுத்தும் செயல்.. இதைத் தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தார். பெண் கல்விக்காக போராடியதால் தாலிபான்களால் சுடப்பட்டவர்தான் மாலாலா.
பாஜக கேள்வி
மலாலாவின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் பதில் அளித்து வருகின்றனர். பாஜகவின் கபில் மிஸ்ரா தமது ட்விட்டர் பதிவில், ஹிஜாப் அணியாததால் தாலிபான்களால் ஆப்கானிஸ்தான் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இந்துக்கள் என்பதாலேயே சீக்கியர்களும் இந்துக்களும் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது எல்லாம் உங்கள் குரல் எங்கே போனது? நீங்கள் மதவாத இஸ்லாமிய ஜிஹாத்தை செயல்படுத்துகிறீர்கள் என விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடந்ததே..
மற்றொரு பாஜக தலைவரான மஜிந்தர்சிங் சிர்சா, பாகிஸ்தானில் இந்து பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது குறித்து ஏன் நீங்கள் பேசவில்லை? என்ன நடந்தது என்பது தெரியாமலேயே பதிவிடாதீர்கள் என கூறியுள்ளார்.