பாஜகவுக்கு ஆறுதல் அளிக்கும் அசாம்... நூலிழையில் வெற்றியை தவறவிடும் காங்... ஏபிபி கருத்துக்கணிப்பு
டெல்லி: அசாம் மாநிலத்தில் 64 முதல் 72 இடங்களில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று ஏபிபி கருத்துக்கணிப்பின் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் 126 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
அசாம் மாநிலத்தில் பிராந்திய கட்சிகள் வலுவாக இல்லை. இதன் காரணமாக தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

கூட்டணி எப்படி
அசோம் கண பரிஷத் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி ஆகியவற்றுடன் பாஜக கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலாண்ட் மக்கள் முன்னணி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸ் மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளது.

பாஜக ஆட்சி
இந்நிலையில், இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் 45% வாக்குகளுடன் பாஜக 64 முதல் 72 இடங்கள் வரை வெல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 74 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் காங்கிரஸ்
அதேபோல கடந்த தேர்தலில் 31% மக்களின் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் இந்த முறை கூடுதலாக 11% வாக்குகளைப் பெறும் என்று ஏபிபி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த முறை 43 இடங்களில் வென்ற காங்கிரஸ் கூட்டணி இம்முறை கூடுதலாக 52 - 60 இடங்களில் வெல்லும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய பிரச்னைகள்
அசாம் மாநிலத்தில் வேலையின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக 45% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல மின்சாரம்/ நீர் வசதி/சாலை வசதி சரியாக இல்லை என 19.2% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அரசு துறைகளில் ஊழல் அதிகரித்துவிட்டதாக 6.9% தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications