லோக்சபாவில் நீட் முறைகேடுகள் விவகாரத்துக்கு எதிராக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தை கிளப்பிவிட்ட பாஜக!
டெல்லி: லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியதற்கு பதிலாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை பாஜக எழுப்பியது.
லோக்சபாவில் இன்று காலை 6-வது நாள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தின் தொடக்கத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் 329 பேரை பலி கொண்ட கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோர் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுந்து, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து ஒருநாள் விவாதிக்க வலியுறுத்தினார். ஆனால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் முடிந்த பின்னர் விவாதிக்கலாம் என்றார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ராகுல் காந்தியின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தம் தெரிவித்தார்.
அப்போது ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாஜக எம்பி அனுராக் தாக்கூர் பேசினார். அவர், தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள்தான் விளக்கம் தர வேண்டும் என்றார். அப்போது பாஜக கூட்டணி எம்பிக்கள் கோரஸாக, 'வெட்கம் வெட்கம் வெட்கம்' என முழக்கமிட்டனர்.
அனுராக் தாக்கூர் பேசிக் கொண்டிருந்த போது திமுகவின் தயாநிதி மாறன் எம்பி எழுந்து சபை விதிகள் சிலவற்றை சுட்டிக்காட்டி நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று பேசுகையில் மணிப்பூர் விவகாரத்தை சுட்டிக்காட்டினார். மணிப்பூர் மாநிலம் ஓராண்டாக பற்றி எரிகிறது; பிரதமர் மோடி வெறும் முழக்கங்களைத்தான் எழுப்புகிறார். இதுவரை மணிப்பூர் மக்களை சென்று சந்திக்கவில்லை. ஜனாதிபதி உரையில் எந்த ஒரு தொலைநோக்குப் பார்வையுமே இல்லை எனவும் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்தார்.
இதனிடையே சிறையில் உள்ள காஷ்மீர் எம்பி ரஷீத், லோக்சபா எம்பியாக பதவி பிரமாணம் செய்து கொள்ள தேசியப் புலனாய்வு ஏஜென்சி அனுமதி கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications