இந்தியா வேண்டவே வேண்டாம்! அரசியலமைப்பிலிருந்தே தூக்கிடுங்க! நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி வலியுறுத்தல்
டெல்லி: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்கிற பெயரில் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், இந்தியா எனும் பெயரை அரசியலமைப்பிலிருந்தே தூக்கிவிட வேண்டும் என்று பாஜக எம்பி நரேஷ் பன்சால் வலியுறுத்தியுள்ளார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ், பாஜக என இருண்டு கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமான தேர்தலாகும். பாஜகவை பொறுத்த அளவில் இந்த எலக்ஷனில் ஜெயித்துவிட்டால் இது ஹாட்ரிக் வெற்றியாக அமையும். அது மட்டுமல்லாது நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக பதவி வகித்தவர் எனும் சாதனைக்கு சொந்தக்காரராக பிரதமர் மோடி மாறுவார். எனவே என்ன ஆனாலும் விட்டுகொடுத்துவிட கூடாது என பாஜக வெறித்தனமாக இருக்கிறது.

இந்த தேர்தலில் ஜெயிப்பதன் மூலம் பாஜகவுக்கு மேலும் சில நன்மைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டு விழாவை (2025ம் ஆண்டு) ஜே-ஜே என கொண்டாடலாம். எந்த தடையும் இருக்காது. அதேபோல என்ஆர்சி போன்ற அமல்படுத்த முடியாத திட்டங்களையும் இந்த முறை அமல்படுத்திவிடலாம். இவை எல்லாம் பாஜகவின் கனவுகளாக இருக்கிறது.
அதேபோல காங்கிரசுக்கும் இது வாழ்வா சாவா என்கிற பிரச்னையாகும். கடந்த 2 நாடாளுமன்ற தேர்தலில் தோற்றதால் கட்சியின் உள்ளே இருப்பவர்களே அதன் தலைமையை மதிக்காமல் இருக்கின்றனர். குலாம் நபி ஆசாத்துக்கு முன்னரும், அதற்கு பின்னரும் பலர் கட்சிக்கு டாடா சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர். பத்தாத குறைக்கு கைவசம் இருந்த டெல்லி உள்ளாட்சி, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஆம் ஆத்மிக்கு தாரை வார்த்து கொடுத்தாகிவிட்டது.
ஆறுதலாக சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சி நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த இரு கட்சிகளும் தேர்தலை தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இந்த சமயத்தில்தான் மணிப்பூர் வன்முறை பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஏற்கெனவே பாஜகதான் ஆட்சியில் இருந்தது. எனவே இரண்டாவது முறைாக ஆட்சியை கைப்பற்ற பல வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமானதுதான் மெய்டெய் மக்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது.
இது மெய்டெய் மக்களின் நீண்ட கால கோரிக்கை. இவ்வாறு ST பட்டியலில் சேர்வதன் மூலம், மலை சரிவுகளில் நிலம் வாங்க முடியும். அதேபோல வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிலும் இடஒதுக்கீடு கிடைக்கும். ஆனால் இதனை குக்கி பழங்குடி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். காரணம் குக்கி மக்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம். எனவே 53 சதவிகிதமாக இருக்கும் மெய்டெய் மக்கள் பழங்குடிகளாக அறிவிக்கப்பட்டால் தங்களின் பிரதிநிதித்துவம், தனித்தன்மை உள்ளிட்டவை காணாமல் போய்விடும் என்று அச்சம் தெரிவித்து எதிர்த்தனர்.
இரு தரப்பின் எதிர்ப்பு ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை காரணமாக 160 பேர் உயிரிழந்தனர். 60 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இரண்டு பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் நாடு முழுவதும் மணிப்பூர் பாஜக அரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்தன.

நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை தீவிரமாக எழுப்பி வருகின்றன. காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திமு, திரிணாமுல் காங்கிரஸ் என 26 கட்சிகள் 'இந்தியா' என்கிற பெயரில் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்த்து வருகின்றன. நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக இரு அவைகளும் தொடர்ந்து 7வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்பி நரேஷ் பன்சால், "இந்தியா என்கிற பெயர் அடிமைத்தனத்தின் அடையாளமாக இருக்கிறது. அரசியல் சாசனத்திலிருந்து இந்த பெயர் நீக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் 1வது பிரிவை திருத்தியமைத்து நாட்டிற்கு 'பாரதம்' என பெயர் வைக்க வேண்டும். இந்தியா என்பதை கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications