பலத்தை காட்டிய பாஜக.. பிசுபிசுத்த எதிர்கட்சிகள்! 200-ஐ தொடாத ஆல்வா - எட்டிப்பிடித்த ஜெகதீப் தன்கர்
டெல்லி: இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் பிரம்மாண்ட வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் ஒருமுறை பாஜக தனது பலத்தை காட்டி இருக்கிறது.
அதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலம் முடிவடைய இருப்பதால் 14 வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

தன்கர் vs ஆல்வா
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிட்டார். இந்த நிலையில் இன்று டெல்லியில் நாடாளுமன்றத்திலும் மாநில தலைமைச் செயலகங்களிலும் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்து மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலையிலிருந்தே வாக்குகளை செலுத்தினர். 5 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

ஜெகதீப் தன்கர் வெற்றி
அதன் தொடர்ச்சியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 725 பேர் வாக்களித்தனர். 92.94% வாக்குகள் பதிவாகின. பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும் மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்று உள்ளார். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஜெகதீப் தன்கரின் வாக்கு வித்தியாசம் இதுவரை இல்லாத அளவு அதிகம் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

பெரும் வெற்றி
நாடாளுமன்றங்களில் பல்வேறு எதிர்ப்புகளை பாஜக சந்தித்தாலும் தேர்தல்களில் பலத்தை காட்டிவிடுகிறது. மார்க்கரெட் ஆல்வா இதில் 200 வாக்குகளை கூட எட்டாதது எதிர்க்கட்சிகளின் பலவீனத்தையே காட்டுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் உடன் இருந்த திரிணாமூல் இதில் விலகியதும் இதற்கு ஒரு காரணம். அதேபோல் குடியரசுத் தலைவர் தேர்தலைபோல் இதிலும் கட்சி மாறி வாக்குகள் விழுந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்க்கரெட் ஆல்வாவும் இதே சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications