உடைந்த கெஜ்ரிவால் பிம்பம்.. கோபத்தில் மிடில் கிளாஸ்! ஆம் ஆத்மியை துடைத்தெறிய என்ன காரணம்? 5 பாயிண்டு
டெல்லி: தலைநகர் டெல்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்த சூழலில், இந்த முறை படுதோல்வி அடைந்தது. அங்கு இந்த முறை பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்விக்கு என்ன காரணம்? இதற்கு மேஜர் 5 காரணங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி இந்தளவுக்கு மோசமான தோல்வி அடைய என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

மிடில் கிளாஸ் மக்கள்:
கடந்த காலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குக் காரணமே நடுத்தர வர்க்கத்தினர் தான். அரசியல் கட்சிகள் மீது நடுத்தர வர்க்கத்தினருக்கு இருந்த விரக்தியே ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஆம் ஆத்மி மிடில் கிளாஸை மறந்துவிட்டது போலவே இருந்தது. அக்கட்சி கொண்டு வந்த பல திட்டங்கள் ஏழைகளைக் குறிவைத்தே இருந்தது.
200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 என கெஜ்ரிவால் கொண்டு வந்த திட்டங்கள் ஏழை மக்களைக் கவர்ந்தாலும், மிடில் கிளாஸ் மக்களை ஈர்க்கவில்லை. டெல்லியில் சுமார் 40-50% வரை மிடில் கிளாஸ் மக்களே உள்ள சூழலில், இது முக்கியமானதாக மாறுகிறது. மறுபுறம் பாஜகவின் திட்டங்கள் குறிப்பாக வருமான வரி விலக்கு ஆகியவை மிடில் கிளாஸ் மக்களை பாஜக பக்கம் அழைத்து வந்துள்ளது.
உள்கட்டமைப்பு
அடுத்து சாலை உள்கட்டமைப்பு. கடந்த சில ஆண்டுகளில் டெல்லியில் சாலையின் தரம் மிக மோசமாக மாறிவிட்டது. சாலைகள் மற்றும் வடிகால் அமைப்புகள் மிக மோசமாக இருந்தது. ஒரு நாட்டின் தலைநகரில் உள்ள சாலைகள் இப்படி இருப்பதை மக்கள் விரும்பவில்லை. இது மக்களுக்கும் கூட பெரும் சிரமத்தையே அளிப்பதாக இருந்தது.
முன்பு டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. இதனால் கடந்த தேர்தலில் சாலைகள் மோசமாக இருக்க பாஜக தான் காரணம் என்று ஆம் ஆத்மி சொன்னது. அது ஓரளவுக்கு வாக்காளர்களிடையே எடுபட்டது. ஆனால், இந்த முறை மாநகராட்சியும் கூட ஆம் ஆத்மி வசமே இருந்தது. இதனால் சாலைகள் இவ்வளவு மோசமாக இருக்க ஆம் ஆத்மி தான் காரணம் என மக்கள் நினைத்தனர். மக்கள் ஆம் ஆத்மி மீது கடுப்பாக இதுவும் பிரதான காரணமாகும்.
துணை நிலை ஆளுநர் உடனான மோதல்:
சாலை பிரச்சினை குறித்து மக்கள் கேட்கும் போதெல்லாம், துணை நிலை ஆளுநரே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என ஆம் ஆத்மி கூறி வந்தது. இது மட்டுமின்றி பல்வேறு விவகாரங்களில் டெல்லி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல் வெடித்தது. மத்தியில் பாஜக உள்ள நிலையில், டெல்லியிலும் பாஜக இருந்தால் வளர்ச்சி பணிகள் விரைவாக நடைபெறும் என்பதும் கூட மக்கள் பாஜக பக்கம் வரக் காரணமாக இருக்கலாம்.
உடைந்த கெஜ்ரிவால் இமேஜ்:
அடுத்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது. ஊழல் ஒழிப்பைப் பிரதானமாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்த கட்சி ஆம் ஆத்மி.! அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலே மதுபான ஊழல் விவகாரத்தில் கைதானது பெரும் சர்ச்சையானது. இது கெஜ்ரிவாலின் இமேஜை மொத்தமாக காலி செய்வதாக இருந்தது. இதுவும் ஆம் ஆத்மி தோல்விக்குப் பிரதான காரணமாக இருக்கிறது.
மக்கள் மீதான எதிர்ப்பு:
கடைசியில் மக்களுக்கு ஆட்சி மீதான எதிர்ப்பு மனநிலை. பொதுவாகவே ஆளும் கட்சி மீது மக்களுக்கு ஒருவித எதிர்ப்பு இருக்கும். ஆம் ஆத்மி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சூழலில், மக்களின் எதிர்ப்பு மனநிலையும் அக்கட்சியின் தோல்விக்குக் காரணமாக மாறியது.












Click it and Unblock the Notifications