5 மாநில தேர்தல்: அறிவிப்பு வந்த சில மணி நேரத்தில் அதிரடி! பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
டெல்லி: ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியலையும் இன்று அறிவித்துள்ளது. பல்வேறு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்து வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களில் இன்று வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி ரிலீஸ் செய்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. குறிப்பாக காங்கிரஸ் வலுவான வெற்றியை சத்தீஸ்கரில் பெற்றது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகள் வித்தியாசத்திலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக செய்த ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகளின் ஆட்சி காலம் நிறைவடைகிறது. இந்த மாநிலங்களைபோல் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜொராம்தங்கா தலைமையிலான எம்.என்.எஃப் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தென் மாநிலமான தெலுங்கானாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது.
அங்கு சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுடன் அந்த அரசுகளின் பதவி காலமும் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. சில மாநிலங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பரப்புரைகளும் தொடங்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சற்றுமுன் வெளியிட்டார். அதன்படி மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதியும் தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும். அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நண்பகலில் தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்த நிலையில், சில மணி நேரங்களில் பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தேர்தல் தேதி இன்று காலை வெளியான நிலையில், பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், ராஜஸ்தானுக்கு 61 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேச முதல்வரும் அம்மாநில பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான், சவுகான் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார். சிவராஜ் சிங் சவுகான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதில் பல்வேறு யூகங்கள் கிளம்பி வந்தது. இதற்கு காரணம் இதற்கு முன்பாக பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் சிவராஜ்சிங் சவுகான் பெயர் இடம் பெறவில்லை. இதனால், சிவராஜ் சிங் சவுகானே தனது ஆதங்கத்தை வெளியிடும் வகையில் பொதுக்கூட்டங்களில் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான், சிவராஜ் சிங் சவுகான் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஷ்கரில் 64 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. சத்தீஷ்கரின் லோர்மி தொகுதியில் மாநில பாஜக தலைவர் அருண் சாவ் போட்டியிடுகிறார். மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்னும் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications