எல்லையில் சண்டை! ஆனால் இறக்குமதியில் ஓஹோ.. சீனாவுடன் இந்தியா வர்த்தகம்.. சுப்பிரமணியன் சாமி கலாய்
டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா வீரர்களின் ஆக்கிரமிப்பு முயற்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் விவரங்களை பாஜக சுப்பிரமணிய சுவாமி பகிர்ந்து மத்திய அரசை கலாய்த்திருக்கிறார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டரில் டிசம்பர் 9ம் தேதியன்று சீன வீரர்கள் அத்துமீறியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத இந்திய வீரர்கள் அவர்களை அடித்து விரட்டி இருக்கின்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சீனாவுடனான வர்த்தகத்தை முறித்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

வர்த்தக தடை
இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில், "சீனாவுடனான வர்த்தகத்தை நாம் ஏன் நிறுத்தக்கூடாது? சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் இந்தியாவிலும் தயாரிக்கப்படுகின்றன. எனவே இந்த இறக்குமதியை தடை செய்வதன் மூலம் சீனாவுக்கு பாடம் கற்றுக்கொடுக்க முடியும். இந்தியாவில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்" என்று கூறியிருந்தார். அதேபோல இந்த மோதல் விவகாரத்தில் மத்திய அரசு உரிய விளக்கம் கொடுக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தன.

வர்த்தக விகிதம்
ஆனால் வர்த்தகத்தை பொருத்த அளவில் சீனாவுடன் இந்தியா மிக நெருக்கமாக இருந்து வந்திருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் பிரச்னை ஏற்பட்டதற்கு பின்னர் கூட சீனாவுடனான வர்த்தகத்தை இந்தியா தொடர்ந்து அதிகரித்தே வந்திருக்கிறது. அதாவது, 2020-2021ம் ஆண்டு சீனாவுடன் இந்தியா 86.39 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கிறது. இது 2021-2022ம் ஆண்டில் 100 பில்லியன் டாலரை கடந்து 115.83 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 34.06 சதவிகிதம் அதிகமாகும். கடந்த பத்தாண்டுகளுடன் இதனை ஒப்பிட்டு பார்த்தால் தற்போது அந்நாட்டுடன் இந்தியாவின் வர்த்தகம் 35.82 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

நடப்பாண்டு வர்த்தகம்
நடப்பாண்டை பொருத்த அளவில் முதல் 7 மாதங்களில் அதாவது ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சீனாவுடன் 69.114 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்தியா வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கிறது. 2021-2022ம் ஆண்டில் இந்தியா அண்டை நாடுகளுடன் மேற்கொண்ட வர்த்தகத்தில் 11.19 சதவிகிதம் சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா, சீனாவுடன்தான் அதிக அளவு வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கிறது. இதுதான் மத்திய அரசு மீதான விமர்சனத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. எதிர்க்கட்சிகளும் இந்த வர்த்தகத்தை குறைக்கச் சொல்லி வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சொந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி பாஜக மீது இது குறித்த விமர்சனத்தை வைத்துள்ளார்.

ராணுவ பலம்
இன்று இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், மேற்குறிப்பிட்ட தகவல்கள் அடங்கிய செய்தியை பகிர்ந்திருக்கிறார். மேலும், "சீனாவிலிருந்து பொருட்கள் அமோகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக டாலரில் கூட பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று கலாய்த்துள்ளார். டிசம்பர் 9ம் தேதியன்று அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலில் இந்தியா தரப்பில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லையென்றும், சீனா தரப்பில் பெரும்பாலானோர் காயமடைந்துள்ளனர் எனவும் இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ராணுவ பலத்தை பொருத்த அளவில் சீனாவிடம் 350 அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இந்தியாவிடம் 160தான் இருக்கிறது. அதேபோல சீனா ஆண்டுக்கு 293 பில்லியன் டாலர்களை தனது ராணுவத்திற்கு ஒதுக்குகிறது. ஆனால் இந்தியா 76 பில்லியன் டாலர்களைதான் ஒதுக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications