ராகுல்தான் காங். நிர்வாகி சட்டையை கிழித்தார்! ஆதாரம் என கூறி பாஜக வெளியிட்ட ஃபோட்டோ! பரபரப்பு
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடந்த காங்கிரஸ் போராட்டம் தொடர்பாக பாஜகவின் அமித் மாளவிய ராகுல் காந்தி மீது பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியப் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பண வீக்கம் மோசமான ஒரு சூழலில் இருக்கிறது.
இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட அதிகரித்து உள்ளது. உணவு, பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலையும் கூட கணிசமாக அதிகரித்து உள்ளது.

காங்கிரஸ் போராட்டம்
இதைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தினர். சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தடையை மீறி போராட்டம் செய்ததாகக் கூறி போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

டெல்லி போலீஸ்
கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் அவ்வப்போது போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லி போலீசார் அவர்களைக் கையாளும் விதம் குறித்த விமர்சனமும் அதிகரித்து உள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தில் கூட போலீசார் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் மிக மோசமாக நடந்து கொண்தாக காங்கிரசினர் குற்றஞ்சாட்டினர். பல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆடைகளைக் கூட போலீசார் கிழித்ததாகவும் கூட ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

சட்டை கிழிப்பு
இதனிடையே இந்த போராட்டத்தில் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஒருவரின் டி-சர்ட்டை ராகுல் காந்தியே கிழித்து உள்ளதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். அரசியல் ஸ்டண்ட்டாக இப்படிச் செய்து ராகுல் காந்தி மாட்டிக் கொண்டதாகவும் பாஜகவினர் விமர்சித்து உள்ளனர். இது தொடர்பான ஃபோட்டோக்களையும் பாஜக ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்.

பரபர குற்றச்சாட்டு
அதில் காங்கிரஸ் நிர்வாகி தீபேந்தர் எஸ் ஹூடா என்பவரை டெல்லி போலீசார் பிடித்து இழுப்பதும், அப்போது ராகுல் காந்தி அவரை விடாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு இருப்பது போலவும் உள்ளது. தீபேந்தர் ஹூடா ஆடை கிழிய வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி வேண்டுமென்றே இப்படிச் செய்ததாக அமித் மாளவிய விமர்சித்துள்ளார். அதேபோல பிரியங்கா காந்தியும் காவலை ஒருவரின் கையை முறுக்கித் தாக்கியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

அமித் மாளவிய
இது தொடர்பாக அமித் மாளவிய தனது ட்விட்டரில், "பிரியங்கா காந்தியின் சம்பவத்திற்குப் பின் இதோ மற்றொன்று. டெல்லி போலீசாரை குற்றஞ்சாட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ராகுல் காந்தியே அவரது கட்சியைச் சேர்ந்த தீபேந்தர் ஹூடாவின் சட்டையைக் கிழித்துள்ளார். ராகுலும் பிரியங்காவும் தமாஷா அரசியலுக்கு மிகவும் ஏற்ற நபர்கள் தான்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications