இந்து - முஸ்லிம் வெறுப்பு.. பாஜக “பிளான்” இதுதான்! டெல்லி யாத்திரையில் போட்டு உடைத்த ராகுல் காந்தி
டெல்லி: உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பாஜக 24 மணி நேரமும் இந்து முஸ்லிம் வெறுப்பை பரப்பி வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் ஒற்றுமை யாத்திரையை தொடங்கி ராகுல் காந்தி 100 நாட்களை கடந்து டெல்லி சென்றடைந்து இருக்கும் நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசனுடன் ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்டு பேசினார்.
தலைநகர் டெல்லியில் ஒற்றுமை யாத்திரையை தொடங்கி இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் பாரதிய ஜனதா கட்சியையும், ஆளும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார். நாட்டில் உள்ள மத ரீதியிலான வேறுபாடுகளை ஆயுதங்களாக பயன்படுத்தி நாட்டில் வெறுப்புணர்வை அதிக அளவில் பரப்பி வருகிறது.
டெல்லியை கலக்கிய ராகுல் - கமல் கூட்டணி.. “தமிழில் பேசுங்க”.. அவர் வைத்த கோரிக்கை! ஒரே உற்சாகம்! ஆஹா!
திசை திருப்பும் பாஜக
பாஜக 24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் வெறுப்புணர்வை பரப்பி, உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் எனது பெயருக்கு கலங்கம் கற்பிக்க ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்து உள்ளார்கள். ஆனால், ஒரே மாதத்தில் உண்மை என்னவென்று நான் காட்டிவிட்டேன்.
கோயில், மசூதி, தேவாலயம்
வெறுப்பு உணர்வை ஒழித்து ஒற்றுமையை ஏற்படுத்துவதே இந்த பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிறைந்ததுதான் இந்தியா. இந்த நாடு ஒன்றுதான். அனைவரும் அதில் ஒற்றுமையோடு வாழ விரும்புகின்றார்கள். நான் பல நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரம் இந்த நாட்டில் நடந்து வந்து இருக்கிறேன்.
ஊடகங்கள் மீது விமர்சனம்
நான் வந்த வழி எங்கும் எந்த விதமான வன்முறைகளையும் நான் பார்க்கவில்லை. ஆனால், தொலைக்காட்சிகளில் எல்லா நேரமும் அதுதான் காட்டப்படுகிறது. ஊடகம் என்பது நண்பன். ஆனால் அது உண்மையில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதை எப்போதும் அது காட்டதுவதே இல்லை. நான் அரசியலுக்கு வந்த 2004 ஆம் ஆண்டு நமது காங்கிரஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தது.
எனக்கு எதிராக திரும்பினர்
ஒரு நாள் முழுக்க ஊடகங்கள் என்னை பாராட்டி வந்தன. நான் உத்தரப்பிரதேசத்தின் பட்டா பர்சாலுக்கு சென்று விவசாயிகளின் நிலப் பிரச்சனை பற்றி பேசினேன். அதன் பின்னர் அனைவரும் எனக்கு எதிராக திரும்பினார்கள்." என்று அவர் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற யாத்திரையில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
தமிழ்நாட்டில் தொடங்கிய யாத்திரை
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பாஜக அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இதில் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர் பேசி வருகிறார்.
இன்னும் 448 கிமீ தூரம்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு சென்ற அவர் 108 வது நாளான இன்று டெல்லியில் யாத்திரை சென்றார். இதுவரை 9 மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களுக்கு அவர் நடந்து சென்று இருக்கிறார். இதனை தொடர்ந்து பஞ்சாப், ஜம்மு காஷ்மீருக்கு 448 கிலோ மீட்டர்கள் தூரம் நடந்து செல்லும் அவர் ஸ்ரீநகரில் தன்னுடைய யாத்திரையை நிறைவு செய்கிறார்.