லோக்சபாவில் வெறுப்பை உமிழ்ந்த ரமேஷ் பிதுரி நினைவிருக்கா.. ஒரே வாரத்தில் அவருக்கு பாஜகவில் புது பதவி!
டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை பார்த்து மிக மோசமான கருத்துகளைக் கூறிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரிக்கு புது பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது. இது கடந்த செப். 18ஆம் தேதி தொடங்கி செப். 22 வரை நடைபெற்றது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கிய இந்தக் கூட்டம், பின் புது நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பெண்கள் 3% இட ஒதுக்கீடு மசோதா தாக்கலானது. பல மாதங்களாக நிலுவையில் இருந்த இந்த மசோதா வெற்றிகரமாக இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
மிக மோசம்: இது நாடே கொண்டாடும் நிகழ்வாக இருந்த போதிலும், நாடாளுமன்றத்தில் மற்றொரு மிக மோசமான சம்பவமும் அங்கே நடைபெற்றது. கடந்த வாரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரி பகுஜுன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை பார்த்து மிக மோசமான கருத்துகளைத் தெரிவித்தார். மத ரீதியான கருத்துகளையும் காதில் கேட்கவே முடியாத சில வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அதற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அப்போதே மன்னிப்பும் கேட்டார். மேலும், அவரது பேச்சு நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது. இதற்கிடையே ரமேஷ் பிதுரியின் பேச்சு குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது. அதில் ரமேஷ் பிதுரி மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது தெளிவாகத் தெரிந்தது. நாடாளுமன்றத்திலேயே அவர் இப்படிப் பேசியதைப் பலரும் கண்டித்தனர்.
நடவடிக்கை இல்லை: ரமேஷ் பிதுரி இப்படிப் பேசும் போது பக்கத்திலேயே அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அவரை கண்டிக்கவில்லை. மாறாக அவரும் லேசாக சிரிப்பது போலவே இருந்தது. பல்வேறு தலைவர்களும் ரமேஷ் பிதுரி பேச்சைக் கடுமையாகக் கண்டித்தனர். மேலும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இருப்பினும், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புது பதவி: மேலும், அப்போதே சில தலைவர்கள் பாஜகவுக்கு இது புதிது இல்லை என்றும் தொடர்ந்து வெறுப்புவாத கருத்துகளையே பரப்பி வருவதாகவும் சாடினர். மேலும், இதை ஊக்குவிக்கும் வகையில் விரைவில் ரமேஷுக்கு முக்கிய பதவியை அளிப்பார்கள் என்றும் கூறியிருந்தனர். இந்த சர்ச்சை நடந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், ராஜஸ்தானின் டோங் என்ற பகுதியின் பாஜக தேர்தல் பிரச்சார குழு தலைவராக ரமேஷ் பிதுரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரமேஷ் பிதுரி குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவர். இந்த டோங் மாவட்டத்தில் மொத்தம் நான்கு இடங்கள் இருக்கிறது. அங்குள்ள குர்ஜார் சமூக மக்களைக் கவர ரமேஷ் பிதுரியை இறக்கியுள்ளனர். இங்கே டோங் தொகுதி இப்போது முன்னாள் துணை முதல்வரும் ராஜஸ்தானில் இளம் காங். தலைவராகவும் உள்ள சச்சின் பைலட்டிடம் உள்ளது. இந்த டோங்க் தொகுதி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் மாறி மாறி சென்றுள்ளது. கடந்த 1993க்கு பிறகு எந்தவொரு எம்எல்ஏவும் இங்கே தொடர்ச்சியாக இரண்டு முறை வென்றதில்லை.
இந்தச் சூழலில் ரரேஷ் பிதுரி மூலம் இங்கே வெல்லும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதற்கிடையே நேற்று புதன்கிழமை ஜெய்ப்பூரில் பாஜகவின் மாநில தலைவரான சிபி ஜோஷி தலைமையில் நடைபெற்ற பிரசார ஆலோசனைக் கூட்டத்திலும் ரமேஷ் பிதுரி கூட்டத்தில் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications