பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட... கோவாக்சினுக்கு தடை விதித்த பிரேசில்... இது தான் காரணம்
டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இறக்குமதிக்குப் பிரேசில் சுகதார துறை தடை விதித்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்திருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளன. இருப்பினும், பல நாடுகளில் தேவையான தடுப்பூசி கிடைப்பதில்லை.

கொரோனா தடுப்பூசிகள்
தற்போது சர்வதேச அளவில் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அடுத்து, ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி தற்போது இந்தியா, ஈரான், நேபாளம் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கோவாக்சினுக்கு நோ
இந்நிலையில், சுமார் இரண்டு கோடி கோவாக்சின் தடுப்பூசிகளுக்குப் பிரேசில் ஆர்டர் அளித்திருந்தது. இருப்பினும், தற்போது கோவாக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்யப் பிரேசில் சுகாதார துறை தடை விதித்துள்ளது. இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை நிரூபிக்க எவ்வித உரிய ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியானது.

பாரத் பயோடெக் பதில்
பாரத் பயோடெக் நிறுவனம் இத குறித்துக் கூறுகையில், ''பிரேசில் சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டிய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வோம். இதற்கான காலக்கெடு குறித்து பிரேசிலுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் இந்த விஷயம் சுமுகமாகத் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், நிகாரிக்கப்பட்டதற்கான காரணத்தை பாரத் பயோடெக் குறிப்பிட மறுத்துவிட்டது.

கோவாக்சின் தடுப்பூசி
கோவாகின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. மூன்றாம்கட்ட மருத்துவ சோதனையில் இந்தத் தடுப்பூசி சுமார் 81% பலனளிப்பதாகத் தெரியவந்தது. மேலும், இந்தத் தடுப்பூசி பிரிட்டன் வகை கொரோனாவுக்கு எதிராகவும் பலன் அளிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கோவாக்சின் தடுப்பூசியையே எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் கொரோனா பாதிப்பு
சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாகப் பிரேசில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசில் நாட்டில் 86,704 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 1.26 கோடியைக் கடந்துள்ளது. அதேபோல நேற்று மட்டும் 3,668 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 3.17 லட்சத்தைத் தாண்டியுள்ளது












Click it and Unblock the Notifications