அமெரிக்காவை அலறவிட நமக்கிருக்கும் ஒரே ஆயுதம்.. BRICS! மத்திய அரசு விழித்துக்கொள்ளுமா?
டெல்லி: இந்தியா மீது கூடுதல் வரி தொடர்பான அச்சுறுத்தலை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தலை சமாளிக்கவும், அமெரிக்காவை எதிர்கொள்ளவும் இந்தியாவுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் பிரிக்ஸ் மட்டும்தான் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா நமக்கு மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியா என்று கேட்டால் ஆமாம் என்றுதான் சொல்ல முடியும். 2024-25 நிதியாண்டில், சுமார் 86.51 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அமெரிக்காவுக்கு நாம் நம் நாட்டின் பொருட்களை விற்பனை செய்துள்ளோம்.

ஆனால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 45.33 பில்லியன் டாலர்கள்தான். அதாவது பாதிக்கு பாதி அளவுக்கு அமெரிக்காவின் பொருட்களை நாம் குறைவாக வாங்குகிறோம். இதுதான் அமெரிக்கா நம் மீது ஆத்திரமடைய முக்கிய காரணம். நாங்கள் வாங்கும் அளவுக்கு எங்கள் பொருட்களை நீங்களும் வாங்க வேண்டும் என்று கோருகிறது. மேலோட்டமாக பார்த்தால் எல்லாம் ஓகே போல தோன்றும். ஆனால் உண்மையில் அப்படி கிடையாது.
ஏனெனில் அமெரிக்க டாலரின் மதிப்பும், இந்திய ரூபாயின் மதிப்பும் சமமா? இன்றைய தேதியில் 86 ரூபாய் கொடுத்தால்தான் ஒரு அமெரிக்க டாலர் கிடைக்கும். அப்படியெனில் நமக்குதான் டாலர்கள் தேவை. எனவே நம்முடைய பொருட்களை அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து, அதன் மூலம் டாலர்களை பெற்று வருகிறோம். இந்தியாவின் கரன்சி அமெரிக்காவுக்கு அவசியமில்லை. எனவே, நம்மை போன்று பொருட்களை விற்றுதான் வாழ வேண்டும் என்று அமெரிக்காவுக்கு கட்டாயம் கிடையாது.
எனவேதான் நாம் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியை போட்டு, அந்நாட்டு வர்த்தகத்திற்கு மூக்கணாங்கயிறு போட்டு கட்டிருக்கிறோம். இதெல்லாம் தெரிந்தும் கூட, இந்தியா எங்களுடன் வர்த்தகம் செய்யவில்லை, எனவே நாங்கள் கூடுதல் வரியை போடுகிறோம் என்று டிரம்ப் மிரட்டியுள்ளார். அப்படியெனில் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய இந்திய முன் வர வேண்டும். அதாவது அமெரிக்க டாலரை கொடுத்துதானே அந்நாட்டு பொருட்களை நாம் வாங்ககிறோம். அதேபோல ரூபாயை கொடுத்து நம்மூர் பொருட்களை அமெரிக்கா வாங்க வேண்டும்.
இதெல்லாம் நடக்குற கதையா? எனவே இந்தியா பிரிக்ஸ் பக்கம் முழுமையாக திரும்பி, ஆசிய நாடுகளுடன் வணிகத்திலும், இதர பல விஷயங்களிலும் ஒன்றிணைய வேண்டும். அப்படி நடந்தால் மட்டும்தான் நம்மால் அமெரிக்காவின் கொட்டத்தை அடக்க முடியும். குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனி கரன்சியை உருவாக்க இந்திய முன்வர வேண்டும். இப்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் செட் ஆகவில்லை என்பது உண்மைதான். இருப்பினும் சீனாவை விட அமெரிக்க ஆபத்தானது.
எனவே சீனாவுடன் கைகோர்த்து, அமெரிக்காவை வீழ்த்த வேண்டும். இந்த கைகோர்ப்பில், இந்தியா தனது தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனியாக கரன்சி உருவானால், அதை வைத்து டாலரின் ஆதிக்கத்தை குறைத்துவிடலாம். அப்புறம் அமெரிக்கா எவ்வளவு வரியை போட்டாலும் அது நமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications