"விலைவாசி ரொம்ப ஏறிடுச்சு! சாப்பாட்டுப் பில்லை நீங்களே கொடுங்க!" விருந்தினரை மிரள வைக்கும் மணப்பெண்
டெல்லி: விலைவாசி அதிகரித்து வரும் சூழலில் மணப்பெண் ஒருவரது செயல் இப்போது இணையத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அனைவரது வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு, அனைவரும் அதை அன்புக்குரியவர்களுடன் கொண்டாடவே விரும்புவார்கள்.
அதேநேரம் திருமணத்திற்கு ஆகும் செலவைப் பார்த்தால் அத்தனை பேருமே மிரண்டுவிடுவார்கள். அதிலும் இப்போது விற்கும் விலைவாசி குறித்து தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை.

கொரோனா
கொரோனா காலகட்டத்தில் யாருக்கு லாபமோ இல்லையோ, திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பெரிய லாபம் தான். அதிகபட்சம் 20, 25 பேரை வைத்துக் கொண்டு சத்தமில்லாமல் திருமணத்தை நடத்திவிட்டார்கள். ரிசப்ஷனும் வைக்க முடியாது என்பதால் செலவே இல்லாமல் திருமண வாழ்க்கையைத் தொடங்கிவிட்டார்கள். இப்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், மீண்டும் விமர்சையாக திருமணங்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன.

திருமணம்
கொரோனாவுக்கு பின்னர் பல்வேறு காரணங்களால் அனைத்து பொருட்களின் விலைவாசியும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக எண்ணெய், காய்கறி, பழங்களின் விலை கணிசமாகவே அதிகரித்து உள்ளது. அனைத்து திருமணங்களிலும் உணவு முக்கியம் என்பதால், இந்த விலைவாசி உயர்வு திருமணத்தை பிளான் செய்பவர்களின் பர்ச்சை பதம் பார்க்கிறது.

இணையத்தில் பரவும் கேள்வி
யோசித்துப் பாருங்கள்! எந்த திருமணத்திலாவது சாப்பாட்டிற்குத் தனியாகக் கட்டணத்தைச் செலுத்தச் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதுபோன்ற ஒரு நிகழ்வு சீக்கிரமே நடக்கப் போகிறது. விரைவில் திருமணம் ஆகவுள்ள பெண் ஒருவர் தனது பேஸ்புக்கிலும் ரெட்டிட் தளத்திலும் இது தொடர்பாகச் சந்தேகம் கேட்டுப் பதிவிட்டுள்ள போஸ்ட் தான், இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

சந்தேகம்
அந்தப் பெண் பேஸ்புக் பக்கத்தில், "திருமணத்திற்கு வருவோரிடம் இதுவரை யாராவது பணம் கேட்டிருக்கிறார்களா? இப்போது எல்லா பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. எங்கள் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழையும் அனைவருக்கும் அனுப்பி விட்டோம். தற்போது விற்கும் விலைவாசியில் இதை எப்படி நடத்தப் போகிறோம் என்றே தெரியவில்லை.

வாங்கலாமா
இப்போது எங்களுக்கு இருப்பது இரண்டே ஆப்ஷன் தான். ஒன்று திருமணத்தைத் தள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் திருமணத்திற்கு வருவோரிடம் உணவுக்கான காசை வாங்க வேண்டும். எங்கள் திருமணத்திற்கு வருவோர் பரிசுகளைக் கொடுக்க வேண்டாம். அதற்குப் பதிலாக உணவுக்கான கட்டணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறோம். இதனால் நான் கடும் மன அழுத்தத்தில் உள்ளேன், தயவு செய்து எனக்கு உதவுங்கள்" என்று அந்தப் பெண் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்
இதற்குப் பலரும் பல விதமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் வீட்டிற்கு வரும் விருந்தினரிடம் இப்படிக் காசு கேட்பது அநாகரீகமானது என்று பதிவிட்டுள்ளனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் கிப்டிற்கு பதிலாக உணவுக்கான கட்டணம் என்றால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலரோ திருமணத்திற்கு முன்பு, சிக்கனமாக இருக்க பிளான் போடும் இந்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications