தவறுதலாக சிக்கிய BSF ஜவான்! பாக் வசம் மாட்டும் இந்திய வீரர்களுக்கு என்ன நடக்கும் என தெரிஞ்சிக்கோங்க
டெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தவறதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய பிஎஸ்எஃப் வீரரை அந்நாட்டு ராணுவம் கைது செய்திருக்கிறது. பொதுவாக இந்திய வீரர்கள் பாக். ராணுவத்தால் கைது செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
நேற்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பஞ்சாப் மாவட்டத்தில் பி.கே.சிங் எனும் பிஎஸ்எஃப் வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெரஸ்பூர் பகுதியில் தவறுதலாக சர்வதேச எல்லையை அவர் மீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்திருக்கிறார். இதனையடுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இரு நாட்டு வீரர்கள் இதுபோன்று கைது செய்யப்படும்போது எந்த மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது ஏற்கெனவே வகுக்கப்பட்டிருக்கிறது.
1. சர்வதேச சட்ட விதிகள்
2. ஜெனீவா ஒப்பந்த விதிகள்
இது இரண்டும் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கைது செய்யப்படும் ராணுவ வீரர்கள் முழு சுயமரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பின் உடனடியாக மருத்துவ உதவி செய்யப்பட வேண்டும். மனிதாபிமானமாக நடத்தப்பட வேண்டும். அவர்களை பயமுறுத்தவோ, தாக்கவோ கூடாது. கைது செய்யப்பட்டவரிடமிருந்து தகவல்களை பெற துன்புறுத்த கூடாது. கைதிகள் பரிமாற்றம் மூலம் அவர்களை சொந்த நாட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்டவர்கள் ரெட் கிராஸ் மூலம் அவர்களது குடும்பத்தை தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டும். இப்படி சர்வதேச சட்டமும் ஜெனீவா ஒப்பந்தமும் கூறுகிறது. ஆனால் யதார்த்தத்தில் இது அனைத்தும் சாத்தியமில்லை.
பாகிஸ்தான் வசம் இந்திய ராணுவ வீரர் சிக்கினால் முதலில் அவரிடமிருக்கும் அனைத்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படும். பின்னர் அவர் கைது செய்யப்படுவார். ஒருவேளை போர் நடக்கும்போது பிடிபட்டால் அவரை போர் கைதியாக பாக் கருதும். இதற்கடுத்து ராணுவ ரகசியங்களை கேட்டு பெற முயற்சிக்கும். கைது செய்யப்படும் ராணுவ வீரர்களிடமிருந்து பெயர், பதவி, ராணுவ எண் இவற்றை தவிர வேறு எதையும் எதிரி நாடுகள் கேட்கக்கூடாது என்பது விதி.
சில ராணுவ வீரர்கள் தங்கள் பெயரையும், பதவியையும் சொல்லாமலேயே இருப்பார்கள். இது அவர்களின் மன உறுதியை காட்டுகிறது. இதற்காக அவர்கள் சில நேரம் கொல்லப்படுவதும் உண்டு. ஆனால் பாகிஸ்தான்-இந்தியா உரசலில் இப்படியான சம்பவங்கள் நடந்ததாக பதிவு இல்லை. கடைசியாக இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்தார். முகம் முழுவதும் ரத்தம் படிந்த நிலையில் வெளியான அவரது போட்டோ மொத்த இந்தியாவையும் உலுக்கியது.
அவரை வைத்து பாகிஸ்தான் கேமை விளையாடும் என்று பலரும் அச்சமடைந்திருந்தனர். ஆனால் 60 மணி நேரத்தில் அவர் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார். போர் தவிர்ப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்கள் வேறு, இன்றைக்கு உள்ள ஆட்சியாளர்கள் வேறு. எனவே, இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் வீரரை பாகிஸ்தான் எப்படி நடத்தும் என்பதை கணிக்க முடியாமல் இருக்கிறது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
எது எப்படி இருப்பினும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் பிஎஸ்எஃப் வீரரை சர்வதேச விதிகளின்படி மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications