காவிக்கு மாறிய பிஎஸ்என்எல்.. கனெக்டிங் இந்தியா டூ கனெக்டிங் பாரத்.. 7 புதிய வசதிகள் என்னென்ன?
டெல்லி: மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி லோகோ காவி நிறத்திற்கு மாறி உள்ளது. அதேபோல் Connecting India என்னும் வாசகம் Connecting Bharat என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதோடு ஏழு புதிய சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிகராக சேவையை வலுப்படுத்தி வருகிறது.
இந்தியாவின் நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மூன்று தனியாருடையது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் ஆகும். இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 4ஜி சேவையை நாடு முழுவதும் பரவலாக்கிய பின்னர், தனது சேவையை வேகப்படுத்தி மலிவான கட்டணத்துடன் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஏழு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க், பிஎஸ்என்எல் ஐபிடிவி, டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி, பைபர் டு தி ஹோம் பயனர்களுக்கு தேசிய Wi-Fi ரோமிங் சேவை, என்கிரிப்டட் கம்யூனிகேஷன் ஃபார் டிஸாஸ்டர்ஸ், நிலக்கரி சுரங்கத்துக்கு பிரத்யேக 5ஜி நெட்வொர்க் போன்ற சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது. இதில் ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க் என்பது பயனர்கள் மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க வழிவகுக்கும். வைஃபை ரோமிங் வசதி என்பது எஃப்டிடிஎச் (fiber-to-the-home) வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்கும். எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல், இந்த வசதி வழங்கப்படும். அதேபோல, பிஎஸ்என்எல் ஐபிடிவி (fiber-based intranet) தொலைக்காட்சி சேவையும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் 500 லைவ் சேனல்களை காண முடியும். எனினும் இது பிராட்பேண்ட் டேட்டாவை எடுத்துக்கொள்ளாது.
டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி என்ற வசதி எப்படி என்றால், தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்களிலும், அதாவது நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் குறுஞ்செய்தி அனுப்பவும் யுபிஐ பேமெண்ட் செய்யவும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்.

இந்த ஏழு சேவைகளுடன் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது லோகோவை காவி நிறத்திற்கு மாற்றி உள்ளது. Connecting India என்னும் வாசகம் Connecting Bharat என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்காலத்தில் கட்டணங்களை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. கடந்த ஜூலையில் அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை உயர்த்தியிருந்தன. ஆனால் பிஎஸ்என்எல் மட்டும் எந்த கட்டண உயர்வையும் அறிவிக்கவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது கவனம் முழுவதையும் நுகர்வோரை திருப்திப்படுத்துவது மற்றும் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் செலுத்தியுள்ளதாக பிஎஸ்என்எல் தலைவர் ராபர்ட் ரவி கூறியிருக்கிறார்.
இதுபற்றி பிஎஸ்என்எல் தலைவர் ராபர்ட் ரவி கூறும் போது, எதிர்காலத்தில் நாங்கள் எங்கள் கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இன்று,பிஎஸ்என்எல்-இன் முதன்மையான ஆர்வம் எங்கள் நுகர்வோரை மகிழ்ச்சி வைப்பதும், அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது தான் என்றார்.
பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே சோதனை முறையில் 4ஜி சேவைகளை வழங்கத் தொடங்கி உள்ளது. இந்த காலண்டர் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு முழு அளவில் செயல்படுத்தும் என தெரிகிறது. பிஎஸ்என்எல் சுமார் 1.8 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications