பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனால் திடீரென கைவிடப்பட்ட தமிழ், தமிழ்நாடு வார்த்தைகள்! திருக்குறளும் நஹி
டெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தைகள் இடம்பெறாதது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திருக்குறள், புறநானூறு போன்ற வரிகளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கும் நிர்மலா சீதாராமன், இம்முறை தமிழ் வார்த்தைகளே பயன்படுத்தாமல் பட்ஜெட் உரையை வாசித்திருக்கிறார்.
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப்.1ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் நடப்பாண்டில் லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டதால், கடந்த பிப்.1ல் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்பின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி 3வது முறையாக ஆட்சியமைத்தது.

தொடர்ந்து நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில் மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.54 லட்சம் கோடியும், ஊரக வளர்ச்சி ரூ.2.65 லட்சம் கோடியும், வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடியும், உள்துறைக்கு ரூ.1.50 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கல்வித்துறைக்கு ரூ.1.25 லட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.89,287 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியமைய காரணமாக அமைந்த ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
வழக்கமாக திருக்குறள், புறநானாறு போன்ற சங்கக்கால பாடல்களை நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் வாசிப்பார். 2019 பட்ஜெட்டின் போது புறநானூறு பாடலை பாடிய நிர்மலா சீதாராமன், 2020 பட்ஜெட்டின் போது திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி பாடல்களை பாடினார். அதன்பின் 2021ஆம் ஆண்டு பட்ஜெட்டில் திருக்குறளையும் வாசித்து பட்ஜெட் உரையை தொடங்கினார்.
ஆனால் இந்த பட்ஜெட்டில் தமிழ் என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு சார்பாக வெள்ள பாதிப்பிற்கான நிதியுதவி, மெட்ரோ திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய பட்ஜெட்டில் தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் கூட இடம்பெறாதது மக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications