தமிழருக்கு கிடைத்த பெருமை.. இந்தியாவில் முதல் பட்ஜெட் தாக்கலானது எப்போது? 10 சுவாரசிய தகவல்கள்
டெல்லி: பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவின் முதல் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் தமிழருக்கு இருக்கும் பெருமை பற்றி இங்கே பார்ப்போம்.
கடந்த 2017 ம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது அவரது 8 வது பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டை மொத்த நாடும் எதிர்நோக்கி காத்துள்ளது. பட்ஜெட்டில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வெளியாகும் என்று பாமர மக்கள் முதல் பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில் தான் நம் நாட்டில் எப்போது பட்ஜெட் தாக்கல் நடைமுறைக்கு வந்தது. சுதந்திரத்துக்கு முன்பு பட்ஜெட்டை தாக்கல் செய்தது யார்? சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது யார்? பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரம், நாள் மாற்றம் குறித்த 10 சுவாரசிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
* இந்தியாவில் முதல் முதலாக பட்ஜெட் 1890ம் ஆண்டு ஏப்ரல் 7 ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி சார்பில் இந்த பட்ஜெட்டை ஸ்காட்லாந்து பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார்.
* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் என்பது 1947 ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஆர்கே சண்முகம் செட்டி. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்கும் பெருமை.
* மத்திய பட்ஜெட்டை முதல் முறையாக தாக்கல் செய்த பெண் யாரென்றால் அது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தான். 1970-71ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இந்திரா காந்தி முதல் முறையாக தாக்கல் செய்தார். அதன்பிறகு 2019ல் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த 2வது பெண் நிர்மலா சீதாராமன் ஆவார்.
* அதிக வார்த்தைகளில் பட்ஜெட் உரையை நிகழ்த்தியவர் என்ற பெருமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வசம் உள்ளது. கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ராவ் அரசு சார்பில் அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மொத்தம் 18,650 வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதற்கு அடுத்தப்படியாக 2018 ல் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் 18,604 வார்த்தைகள் இருந்தது.
* பட்ஜெட் உரையை அதிக நேரம் வாசித்த தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவர் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை 2 மணிநேரம் 42 நிமிடங்கள் வாசித்தார்.
* 1999ம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட் என்பது பிப்ரவரி மாத கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்படும். இந்த நடைமுறையை மாற்றியவர் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா. அவர் பிப்ரவரி மாத கடைசி வேலை நாளில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை கொண்டு வந்தார்.
* பொதுவாக மத்திய பட்ஜெட் என்பது பிப்ரவரி மாத இறுதியில் தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த 92 ஆண்டு கால நடைமுறையை 2017 ல் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி மாற்றினார். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
* கடந்த 2016 வரை மத்திய அரசு பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என்று 2 பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த நடைமுறை என்பது கடந்த 2017 ம் ஆண்டு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மாற்றினார். ரயில்வேக்கான தனி பட்ஜெட் நீக்கப்பட்டு பொது பட்ஜெட்டுடன் சேர்க்கப்பட்டது.
* மத்திய பட்ஜெட்டை அதிக முறை தாக்கல் செய்த நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மொராஜி தேசாய் உள்ளர். இவர் மத்திய பட்ஜெட்டை 10 முறை தாக்கல் செய்துள்ளார்.
* பிரதமராக இருந்து கொண்டே 3 பேர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இந்த லிஸ்ட்டில் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications