நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப் போட்ட 5 முக்கிய மத்திய பட்ஜெட்கள்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
டெல்லி: 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். மத்திய பட்ஜெடில் வருமான வரி உள்ளிட்டவற்றில் என்ன மாற்றங்கள் செய்யப்படும்? எந்தெந்த துறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்? அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ளும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுமா? என பல எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகள் ஒவ்வொன்றும் நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த ஆர்கே சண்முகம் செட்டியார், அதன் பின்னர் டிடி கிருஷ்ணமாச்சாரியார், ப.சிதம்பரம், தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என 4 தமிழர்கள் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

நாட்டில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சரித்திரத்தில் இடம்பிடித்த 5 பட்ஜெட் விவரங்களை இங்கே பார்க்கலாம்
செல்வ வரி அறிமுகமான 1957-58 பட்ஜெட்
தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்த டிடி கிருஷ்ணமாச்சாரி 1957-1958-ல் தாக்கல் செய்த பட்ஜெட்டில்தான் முதல் முறையாக செல்வந்த வரி அல்லது செல்வ வரி என்பது அறிமுகம் செய்யப்பட்டது. தனிநபர்களின் சொத்துகளின் மதிப்பீட்டு அடிப்படையில் இந்த செல்வந்த வரி விதிக்கப்பட்டது. இந்திய வரித்துறை வரலாற்றில் இது மிகவும் முக்கியமானதாகவும் பார்க்கப்பட்டது. 1990களில் தாராளமயமாக்கல் அறிமுகமான பின்னர் செல்வந்த வரியில் மாற்றங்கள் ஏற்பட்டு 2015-ல் இந்த நடைமுறையே கைவிடப்பட்டது என்பது வரலாறு.
தாராளமயாக்கல் தொடக்கம் 1991-92
சர்வதேச நாடுகள் உலக வங்கி, காட் ஒப்பந்தம் என பல்வேறு பொருளாதார சிக்கல்கள்/ தீர்வுகள் குறித்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தன; இதற்கு கடும் எதிர்ப்புகளையும் உலக நாடுகள் எதிர்கொண்டிருந்தன. இந்தியாவிலும் இத்தகைய போரட்டங்கள் நடந்தன. அப்போது நமது நாடும் பொருளாதார சிக்கல்களை கடுமையாக சந்தித்த தருணம். அந்த தருணத்தில் பொருளாதார வல்லுநரான மன்மோகன்சிங் நிதி அமைச்சராக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். திட்டக் குழு தலைவராக, தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்து ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்திய அனுபவத்துடன் மன்மோகன் சிங் 1991-ல் தாக்கல் செய்த பட்ஜெட் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கும் சர்வதேச பொருளாதார அரங்கில் இந்தியாவின் தலைநிமிர்வுக்கும் அடித்தளமாக இருந்தது. அன்னிய முதலீடுகளுக்கான கதவுகளை முழுமையாக திறந்துவிடக் கூடிய அளவுக்கு அடிக்கல் நாட்டிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மன்மோகன் சிங். உதாரணமாக சுங்கவரி 220% என்பதை 150% ஆக அதிரடியாக குறைத்தார். தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கைகளை இந்தியா ஏற்றுக் கொண்டு சர்வதேச வர்த்தக உலகில் இணைந்து கொள்வதற்கும் இன்று உலகப் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுப்போம் என பேசுகிறோமோ அத்தனைக்கும் அடித்தளம் போட்ட பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்.
பெரும் பாராட்டு பெற்ற கனவு பட்ஜெட் தாக்கல் செய்த சிதம்பரம் 1997-98
பொருளாதார வல்லுநர்களால் கனவு பட்ஜெட் அழைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையை 1997-98-ல் தாக்கல் செய்தவர் வேட்டி கட்டிய தமிழரான ப.சிதம்பரம்தான். தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் வரி ஆகியவற்றை கணிசமான அளவு குறைத்த பட்ஜெட் அது. அதுவும் தனிநபர் வரியை 40%-ல் இருந்து 30% ஆக குறைக்கும் அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் அறிவித்தார் ப.சிதம்பரம். உதாரணமாக உள்நாட்டு நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதத்தை 40%-ல் இருந்து 35% ஆகக் குறைத்தார். சுங்க வரி 50%-ல் 40% ஆக குறைக்கப்பட்டது. கலால் வரி குறைக்கப்பட்டது. கூடுதல் வரி (surcharge) விதிப்பு நிறுத்தம், ராயல்டி விகிதங்கள் குறைப்பு, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு உயர்வு அதிரடி காட்டியதால் கனவு பட்ஜெட் என காலந்தோறும் போற்றப்படுகிறது.
இந்த கனவு பட்ஜெட் ஏற்படுத்திய தாக்கம் என்ன தெரியுமா? 1997-ஆம் ஆண்டில் ரூ. 18,700 கோடியாக இருந்த வருமான வரி வசூல் 2013-ஆம் ஆண்டில் ரூ. 2 லட்சம் கோடியாக உயர்ந்தது என்றது போர்ப்ஸ் அறிக்கை. பல்வேறு வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய பட்ஜெட்டை சிதம்பரம் தாக்கல் செய்ததால் இந்தியாவின் ஆகச் சிறந்த நிதிநிலை அறிக்கைகளில் ஒன்றாக இன்றளவும் போற்றப்படுகிறது.
ஐடி புரட்சிக்கு வித்திட்ட யஷ்வந்த் சின்ஹாவின் 2000-01 பட்ஜெட்
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா 2000-01-ல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போதுதான் இந்தியாவில் ஐடி துறை மெல்ல மெல்ல கால் பதித்துக் கொண்டிருந்தது. இந்த ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறையின் விஸ்வரூப வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அதிரடியான அறிவிப்புகள் யஷ்வந்த் சின்ஹாவின் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன. இன்றைக்கு ஐடி உலகில் இந்தியா அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது என்பதற்கு யஷ்வந்த் சின்ஹாவின் 2000-01 பட்ஜெட் மிக முக்கிய காரணம். அன்று கம்ப்யூட்டர்கள் விலை அவ்வளவு அதிகமாக இருந்தது. சாமானியர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. இதனால் கம்ப்யூட்டர்கள் உட்பட 21 ஐடி துறை பொருட்களின் சுங்க வரியை வெகுவாகவே குறைத்து அதிரடி காட்டியதுதான் யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட். இந்த பட்ஜெட்டுக்குப் பின் ஐடி துறையில் நாம் கொடி கட்டிப் பறந்து வருகிறோம். இந்தியாவின் ஐடி புரட்சியில் யஷ்வந்த் சின்ஹாவின் பட்ஜெட் மிக முக்கியமான படிக்கல்.
சரித்திரத்தை மாற்றிய அருண்ஜேட்லி பட்ஜெட் 2016-17
இந்தியாவில் ரயில்வே பட்ஜெட், மத்திய பொது பட்ஜெட் என இரண்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தன. 92 ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்ததை 2016-17 பட்ஜெட்டில் மாற்றி ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். இந்திய பட்ஜெட் வரலாற்றில் இது திருப்புமுனை. அன்று முதல் இன்று வரை மத்திய பட்ஜெட்டிலேயே ரயில்வே திட்டங்களும் இடம் பெறுவது தொடருகிறது.












Click it and Unblock the Notifications