பட்ஜெட் 2025: இலக்கை எட்டாமல் சொதப்பும் வேளாண்துறை.. 54% இந்தியர்களின் வாழ்வாதாரம் அவ்வளவுதானா!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் 54% மக்கள் வேளாண் தொழிலை நம்பிதான் இருக்கிறார்கள் என்பதால், இந்த ஆண்டாவது திட்டங்கள் இலக்கை எட்டுமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உலக நாடுகளின் பொருளாதார வரிசையில் இந்தியா 5வது இடத்தில் இருந்தாலும், கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் ஜிடிபி வளர்ச்சி தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த 2022-2023ல் 9 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி, 2024-2025ல் 6% ஆக குறைந்திருக்கிறது. இந்த குறைவுக்கு முக்கிய காரணமாக வேளாண் துறையில் ஏற்பட்ட பின்னடைவு இருக்கிறது. சிம்பிளாக சொல்வதெனில், விவசாயிகள் லாபம் பார்த்தால்தான் அது நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும்.

சரி விவசாயிகளின் லாபத்திற்கு என்ன வழி? உணவு பொருட்களை பதப்படுத்துதல்தான் சரியான வழி. எல்லா காலங்களிலும், எல்லா பயிர்களும் முளைத்துவிடாது. அது அதுக்கு என ஒரு பருவம் இருக்கிறது. ஆனால் எல்லா நாட்களிலும் மக்களுக்கு உணவு தேவை. எனவே, அறுவடை காலத்தில் சேகரிக்கப்படும் தானியங்கள், சோளம் உள்ளிட்ட உணவு பொருட்களை பதப்படுத்தி வைக்க வேண்டும். அப்படி செய்தால்தான் எல்லா நாட்களுக்கும் அந்த உணவு பொருட்கள் மக்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் உணவு தட்டுப்பாடு ஏற்படாது. விலைவாசியும் பெரிய அளவில் உயராது.
இதற்காக 2022-2023ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.282 கோடி உணவு பதப்படுத்தும் துறைக்கு ஒதுக்கப்பட்டது. இதுவே மிக குறைந்த நிதிதான். ஆனால் அடுத்தடுத்த அண்டுகளில் இந்த நிதி, ரூ.219 கோடியாக குறைக்கப்பட்டது. சரி இந்த தொகை முழுமையாக பயன்படுத்தப்பட்டதா? என்று கேட்டால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. ரூ.219 கோடியில் ரூ.170 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மீதி நிதியை பயன்படுத்தவில்லை. இதனால், திட்டமிடப்பட்ட இலக்கை இந்த துறையால் எட்ட முடியவில்லை.
கடந்த 2023-2024 நிதியாண்டில் இந்த துறைக்கு என 60 திட்ட பணிகள் (Project plans) அறிவிக்கப்பட்டன. இதில் 45 மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 2024-2025ல் 100 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் வெறும் 17தான் முடிவுற்றிருக்கிறது. காரணம் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும், ஆக்கபூர்வமாகவும் செலவழிக்காததுதான்.
இப்படி நடக்கும் என்று ஏற்கெனவே மத்திய அரசு கணித்திருந்தது. இதனால், பதப்படுத்துதல் துறையை வளர்க்க, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையை (Production Linked Incentive) கடந்த 2022ம் ஆண்டு அறிவித்தது. 2027 வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10,900 கோடி ஒதுக்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.1800 கோடி ஊக்கத்தொகையாக வழங்கியிருக்க வேண்டும்.
இதனை செயல்படுத்துவதும் சொதப்பலில்தான் பொய் முடிந்திருக்கிறது. 2022 தொடங்கி இன்று வரை 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,101 கோடிதான் ஊக்கமாக வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை ரூ.5,400 வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இப்படி தொடர்ச்சியான சொதப்பல்கள், மத்திய அரசின் திட்டங்களை தோல்வியடைய செய்திருக்கிறது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணம். ஆனால் இந்த துறை மட்டும்தான் காரணமா? என்று கேட்டால் கிடையாது. வேலை வாய்ப்பு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாப்பது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான உதவி, அரசு துறையில் காலியிடங்கள், குறிப்பாக நீதி துறைகளில்.. என பல துறைகளில் திட்டங்கள் இலக்கை எட்டாமல் அப்படியே நிற்கிறது.
எனவே இந்த ஆண்டாவது அரசு அறிவிக்கும் திட்டங்கள், வெறுமென திட்டங்களாக மட்டுமல்லாமல் செயல்முறையில் வெற்றியை கொடுக்கும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications