முடிவுக்கு வருகிறதா பழைய வருமான வரி முறை? பட்ஜெட்டில் நிதியமைச்சர் வைத்த ட்விஸ்ட்!
டெல்லி: இந்தியாவில் இரண்டு விதமான வருமான வரி முறைகள் இருக்கின்றன. இந்நிலையில், இன்று வெளியான பட்ஜெட்டில் பழைய வருமான வரி குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை. எனவே, பழைய வருமான வரி முறை முடிவுக்கு வருகிறதா? என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
பழைய வருமான வரி முறை ஆங்கிலேயர் காலத்தின் கூறுகளை கொண்டிருப்பதாக சொல்லி, கடந்த 2020-2021ம் ஆண்டு புதிய வரி முறையை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

பழைய வருமான வரி முறை என்றால் என்ன?:
இந்த முறையில் உங்களால் சில சலுகைகளை பெற முடியும். உதாரணமாக வீட்டு வாடகை அலவென்ஸ் (HRA), ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள், பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடுகள் மற்றும் மருத்துவ காப்பீடுகளில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் அதில் சில சலுகைகளை பெற முடியும் மற்றபடி, கீழ்கண்டவாறு வருமாண வரி வசூலிக்கப்படுகிறது.
ரூ.2.5 லட்சம் வரை வரி இல்லை
ரூ.2.5 லட்சம் - ரூ.5 லட்சம் வரை 5% வரி
ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரை 20% வரி
ரூ.10 லட்சம் - ரூ.20 லட்சம் வரை 30% வரி
என வரி செலுத்த வேண்டும். இதில் நீங்கள் ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெற்றால் கூட, 80C, 80D மூலம் சில சலுகைகளை பெற முடியும். கடந்த 2024-2025ம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோரில் சுமார் 72% பேர் புதிய வருமான வரி முறையில் தாக்கல் செய்துள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். மட்டுமல்லாது இந்த பட்ஜெட்டில் பழைய வருமான வரி குறித்து எதுவும் குறிப்பிடாதது, இந்த வரி முறையை நீக்கப்போகிறார்களோ என்கிற கேள்வியை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய வருமான வரி முறை என்றால் என்ன?:
இன்று பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டதன்படி ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது. ஆனால் புதிய வருமான வரி முறையில்தான் இது அமலாகும். அதேபோல நீங்கள் ஆண்டுக்கு ரூ.16 லட்சம் வருமானம் பெறுகிறீர்கள் எனில்
ரூ.4 லட்சம் வரை வரி இல்லை
ரூ.4 லட்சம் - ரூ.8 லட்சம் வரை 5% வரி (₹20,000)
ரூ.8 லட்சம் - ரூ.12 லட்சம் வரை 10% வரி (₹40,000)
ரூ.12 லட்சம் - ரூ.16 லட்சம் வரை 15% வரி (₹60,000)
ரூ.16 லட்சம் - ரூ.20 லட்சம் வரை 20% வரி
ரூ.20 லட்சம் - ரூ.24 லட்சம் வரை 25% வரி
ரூ.25 லட்சத்திற்கு மேல் 30% வரி

இதுதான் புதிய வருமான வரியின் அளவு. நீங்கள் ரூ.16 லட்சம் ஆண்டு வருமானம் பெறுபவராக இருக்கிறீர்கள் எனில், மொத்தமாக சேர்த்தே ரூ.1.2 லட்சம்தான் வரி கட்டுவீர்கள். ஆனால் பழைய வரி முறையில் ரூ.1.7 லட்சத்தை வரியாக கட்ட வேண்டி இருக்கும். அந்த வகையில் புதிய வரி முறை ரூ.50,000 வரை சேமிப்பை கொடுக்கிறது.
ஆக நீங்கள் எதிர்க்காலத்திற்காக முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் பழைய வரி முறையை தேர்வு செய்யலாம். ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள், பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடுகள் மற்றும் மருத்துவ காப்பீடுகளில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு பழய வருமன வரி முறையில் சலுகைகள் கிடைக்கும்.
புதிய வருமான முறையில் நீங்கள் அதிக வரியை செலுத்த வேண்டியதில்லை. ஆனால் எதிர்கால திட்டமிடலுக்கு நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு புதிய முறையில் எந்த சலுகைகளும் கொடுக்கமாட்டார்கள்.
இதற்கிடையில் விரைவில் புதிய வருமான வரிச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இந்த சட்டம் அமலாகும்போதுதான் பழைய வரி முறை நீக்கப்படுமா? அல்லது தொடருமா? என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications