என்னங்க பட்ஜெட் இது? அப்படியே முடங்கிய பங்கு சந்தை! என்ன பிரச்சனை? காரணம் இதுதான்!
டெல்லி: மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட்டை வாசித்துக்கொண்டிருந்த போதே பங்குச் சந்தை மளமளவென சரிய தொடங்கியது. பங்கு சந்தை என்பது, பொருளாதாரத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. இது சரிய தொடங்கியது பட்ஜெட் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
பட்ஜெட் உரை தொடங்கியபோது, பங்குச் சந்தைகள் உற்சாகம் காட்டினாலும், முக்கிய அறிவிப்புகளுக்குப் பிறகு நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் சரிவைச் சந்தித்தன.

பங்கு சந்தையில் இறக்கம்
இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, STT உயர்வுதான். பங்குச்சந்தையில் பங்குகள் அல்லது பிற நிதி சார்ந்த பத்திரங்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அரசாங்கத்தால் விதிக்கப்படும் ஒரு நேரடி வரிக்கு பெயர்தான் பத்திர பரிவர்த்தனை வரி. இதைதான் ஆங்கிலத்தில் STT என்று சொல்கிறார்கள். வரி ஏய்ப்பைத் தவிர்க்கவும், வரி வசூலை எளிதாக்கவும் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
பொருளாதார கண்ணாடி
பங்கு சந்தையில் இன்ட்ராடே வர்த்தகர்கள் என ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். ஒரு நாளில் பலமுறை பங்குகளை வாங்கி விற்பதுதான் இவர்களின் வேலை. இவர்கள் மிகச் சிறிய லாபத்தையே எதிர்பார்ப்பார்கள். ஆனால், வரி உயர்வு அந்தச் சிறிய லாபத்தையும் தின்றுவிடும் என்பதால், அவர்கள் வர்த்தகம் செய்வதைக் குறைத்துக் கொள்வார்கள். இது சந்தையில் பணப்புழக்கத்தைக் குறைக்கும்.
ஏன் பாதிப்பு?
அதேபோல ஒவ்வொரு முறையும் பங்குகளை விற்கும்போது அதிக வரி செலுத்த வேண்டியிருப்பதால், வர்த்தகர்களின் ஒட்டுமொத்த லாபம் குறைகிறது. இது முதலீட்டாளர்களைக் கவலையடையச் செய்து, விற்பனை அழுத்தத்தை உருவாக்குகிறது. அரசாங்கம் பெரும்பாலும் பங்குச்சந்தையில் நடக்கும் அதிகப்படியான சூதாட்ட வகை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவே STT-ஐ உயர்த்துகிறது. ஆனால், இது திடீர் மாற்றமாக வரும்போது சந்தையில் ஒருவித அச்சம் ஏற்பட்டு, பெரிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேற முற்படுகிறார்கள்.
வரி உயர்வு
இப்படியாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 6.45 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன. இதற்கு STT-ம் முக்கிய காரணம். பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் STT வரி 5 மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இன்றும் வரி உயர்த்தப்பட்டிருப்பதால், மொத்த வரி 7.5 மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஈவுத்தொகைக்கான வரி
அதேபோல ஈவுத்தொகைக்கான வரியை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதனாலும் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள், தங்கள் முதலீடுகளை குறைத்துக்கொண்டிருக்கின்றனர். இதுவும் பங்கு சந்தை சரிவுக்கு காரணமாகும். கடந்த 2 ஆண்டுகளில் மிக மோசமான பங்கு சந்தையாக இந்திய பங்கு சந்தை இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications