"அவர்கள் நெஞ்சில் புல்டோசரை ஏற்றுவோம்!" செருப்பு வீச்சால் ஆத்திரமடைந்த பீகார் துணை முதல்வர் சர்ச்சை!
டெல்லி: பீகாரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் அங்குத் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அப்போது தன்னை தாக்கியவர்களின் நெஞ்சில் புல்டோசர் ஏற்றுவோம் என்றும் துணை முதல்வர் விஜய் குமார் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இந்த முறை இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று 121 தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இந்த முறை என்டிஏ கூட்டணி, இந்தியா கூட்டணி மற்றும் ஜன் சூராஜ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.

துணை முதல்வர் மீது தாக்குதல்
இதற்கிடையே இன்று பிற்பகல் பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவின் கான்வாய் மீது தாக்குதல் நடப்பட்டது. அவரது தொகுதியான லக்கிசராய் பகுதியிலேயே தாக்குதல் நடந்துள்ளது. அவரது கான்வாயை மக்கள் சூழ்ந்துகொண்டு, கற்களையும் செருப்புகளையும் வீசியுள்ளனர். அங்கு பாஜகவுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது..
பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்த தலைவரான சின்ஹா, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் இந்த முறை மீண்டும் தனது சொந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்குச்சாவடிகளைப் பார்வையிடச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
புல்டோசர் ஏற்றுவோம்
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த விஜய்குமார் சின்ஹா, "இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய எதிர்க்கட்சியான ஆர்ஜேடி ஆதரவு ரவுடிகள்" என்று குற்றம் சாட்டினார். மேலும் அவர், "பீகாரில் நிச்சயம் மீண்டும் என்டிஏ ஆட்சியை அமைக்கும். அப்போது நாங்கள் அவர்கள் நெஞ்சில் புல்டோசரை ஏற்றுவோம்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
மேலும், பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து வரும் சூழலில், சில வாக்குச்சாவடிகளை எதிர்க்கட்சிகள் கைப்பற்றிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தனது வாக்குச்சாவடி ஏஜெண்ட் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார் என்றும் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
போலீஸ் விளக்கம்
துணை முதல்வரின் கான்வாய் தாக்கப்பட்டது.. மேலும், அவரே வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், இதை மாவட்ட காவல்துறை தலைவர் அஜய் குமார் மறுத்துள்ளார். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதாகவும் வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்டதாக ஒரு வதந்தி பரவுவதாகவும் கூறினார்.
யாரும் வரவில்லை
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் இங்கு வந்து பார்த்தபோது, வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து வந்தது. யாரையாவது வாக்களிக்க விடாமல் தடுத்திருந்தால் இந்த வரிசையே இருந்திருக்காது. அமைதியற்ற சூழல் இருந்திருக்கும்" என்று அவர் கூறினார். மேலும், பாஜக ஏஜெண்டுகள் மிரட்டப்பட்டி வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்தார். ஏஜெண்ட் வாக்குப்பதிவு நடந்த இடத்திற்கே வரவில்லை என்ற அவர், இப்போது வந்தாலும் அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க போலீசார் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
பீகாரில் இன்று முதற்கட்டமாக 121 தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நவம்பர் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications