மக்களிடையே பிளவை ஏற்படுத்த.. சரியாக தேர்தல் நேரத்தில் சிஏஏ அறிவிப்பு? காங்கிரஸ் சரமாரி கேள்வி
டெல்லி: சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்தியதன் நோக்கம் என்ன என்றும், மோடியின் அப்பட்டமான பொய்க்கு சிறந்த உதாரணம் இது எனவும் காங்கிரஸ் காட்டமாக விமர்சித்துள்ளது.
பாஜகவின் 2019 தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக குடியுரிமை திருத்த சட்டம் இருந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் மத ரீதியிலான துன்புறுத்தலின் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதியாக தஞ்சம் புகுந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இது தொடர்பான அறிவிக்கையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்தியதன் நோக்கம் என்ன என்றும், மோடியின் அப்பட்டமான பொய்க்கு சிறந்த உதாரணம் இது எனவும் காங்கிரஸ் காட்டமாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஜெயராம் ரமேஷ் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை அமல்படுத்த மோடி அரசுக்கு நான்கு ஆண்டுகள் 3 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன. தனது அரசு மிகவும் நேர்த்தியாகவும் சரியான நேரத்திலும் செயல்படுகிறது என்று மோடி கூறிவருகிறார். சிஏஏ அமல்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் என்பது பிரதமர் மோடியின் பொய்க்கு மற்றொறு சிறந்த உதாரணம்.
9 முறை கால நீட்டிப்புக்கு வாங்கிய பிறகு, லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மிக சாதுர்யமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மக்களை பிரிப்பதற்கான தெளிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர வழக்கில் பிறப்பித்த அதிரடி உத்தரவு திசை திருப்பும் விதமாகவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி போல தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications