சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்: பதற்றத்தில் டெல்லி ஷாகீன் பாக்- 144 தடை உத்தரவு- போலீஸ் குவிப்பு!
டெல்லி: சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் டெல்லி ஷாகீன் பாக்கில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக்கில் 60 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமைதிவழியில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல கட்ட முயற்சிகள் நடைபெற்றன.

டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அப்பகுதியில் இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தன.
ஆனால் இப்போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் ஷாகீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும் எண்ணிக்கையில் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் இந்துத்துவா அமைப்பினர் நடத்திய வெறியாட்டத்தில் 35 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடம்மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 4 வார காலத்துக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
தற்போதுதான் வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலைமை திரும்பி வருகிறது. இந்நிலையில் டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில்தான் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications