‛அக்கவுண்ட்’ உள்ள வங்கியில் மட்டுமே ரூ.2000 நோட்டை மாற்ற முடியுமா? ஆர்பிஐ சொல்வது என்ன? இத படிங்க
டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும், ரூ.2,000 நோட்டை மே 23 முதல் செப்டம்பர் 30க்குள் வங்கியில் மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் ‛அக்கவுண்ட்' உள்ள வங்கிகளில் மட்டும் தான் ரூ.2000 நோட்டை மாற்ற முடியுமா? என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இரவில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை. நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கூறினார்.

இதையடுத்து அந்த நோட்டுகளை மக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றினர். கருப்பு பண பதுக்கலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு புதிதாக ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் நேற்று இரவு 7 மணியளவில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் கரன்சிகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.2000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இந்த ரூ.2000 நோட்டு 2016 நவம்பர் 2ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கி சட்டம் 24(1) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே தான் தற்போது ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுகிறது. பொதுவெளியில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் என்பது தற்போதைய நிலையில் பெருமளவு குறைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் கரன்சி புழக்கத்தின் தேவையை நிறைவு செய்ய இதர மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் போதுமானதாக உள்ளது. இதனால் ரூ.200 நோட்டுகள் 'கிளீன் நோட் பாலிசி' என்ற அடிப்படையில் திரும்ப பெறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் ரூ.2000 நோட்டுகளை மே 23ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் வங்கிகளில் வழங்கி அதற்கு நிகரான பணத்தை பெற்று கொள்ளலாம். இல்லாவிட்டால் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை முதலீடாக செய்யலாம். ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், சட்டப்பூர்வ அடிப்படையில் அந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பலருக்கும் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது ‛அக்கவுண்ட்' உள்ள வங்கிகளில் மட்டும் ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றலாமா? இல்லாவிட்டால் அனைத்து வங்களிலும் மாற்றலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதாவது நாட்டில் அகமதாபாத், பெங்களூர், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கவுஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கி கிளைகளில் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.
மேலும் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் ‛அக்கவுண்ட்' இல்லாமல் இருந்தாலும் கூட அங்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள முடியும். அதாவது வங்கியில் கணக்கு வைத்திருக்காதவர் கூட 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்று கரன்சியை பெற்று கொள்ள முடியும். இருப்பினும் ஒரே நேரத்தில் ரூ 20,000 வரை மட்டுமே மாற்றி கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்மூலம் வங்கியில் அக்கவுண்ட் இல்லாதவர்களும் எளிமையாக ரூ.2 ஆயிரம் நோட்டை அனைத்து வங்கிகளிலும் கொடுத்து மாற்று ரூபாய் நோட்டை பெற்று கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications