"நான் ஏன் காங்கிரஸை அழிக்கணும்.. ராகுல் காந்தியே அதை சூப்பரா செய்கிறார்!" அரவிந்த் கெஜ்ரிவால் நக்கல்
டெல்லி: நாடு முழுக்க ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் நிலை குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லிக்கு வெளியேவும் ஆம் ஆத்மியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.
இந்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாபில் நடந்த தேர்தலில் வென்று ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. டெல்லிக்கு வெளியே ஒரு மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல்முறை.

ஆம் ஆத்மி
பஞ்சாபைத் தொடர்ந்து அடுத்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்குக் குறி வைத்துள்ளது ஆம் ஆத்மி! இந்தாண்டு இறுதியில் குஜராத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பிரசாரத்தை இப்போதே அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிவிட்டார். சமீபத்தில் அகமதாபாத் சென்று இருந்த போது கூட, அவர் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டிற்குச் சென்று இரவு உணவு சாப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸ்
இருப்பினும், ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்துவதாகக் காங்கிரஸ் தலைவர்கள் சாடி வருகின்றன. அதாவது ஆம் ஆத்மி வளர்ச்சி என்பது காங்கிரஸை பலவீனப்படுத்துவதாக அவர்கள் சாடியிருந்தனர். இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியே பலவீனப்படுத்தி வருவதால் தனக்கு அந்த வேலை இல்லை என்று நக்கலாக தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், "என்னைப் பொறுத்தவரைக் கட்சிகளுடன் கூட்டணியை உருவாக்குவதை விட, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை உருவாக்குவது ரொம்பவே முக்கியம். இதன் காரணமாகவே நாங்கள் டெல்லியில் உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்களை உருவாக்கி வருகிறோம். இது தான் நமது நாட்டின் எதிர்காலத்தை மாற்றி வளர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்லும்" என்று அவர் தெரிவித்தார்.

வீணாக்க வேண்டாம்
காங்கிரஸை ஆம் ஆத்மி பலவீனப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் கெஜ்ரிவால் பதில் அளித்தார். சமீபத்தில் குஜராத் பிரசாரத்தின் போதும் கூட கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாக ஆம் ஆத்மியை தேர்ந்தெடுக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

ராகுல் காந்தி
இது தொடர்பாகப் பேசிய அவர், "ஓப்பனாக சொல்கிறேன். கேளுங்கள்! காங்கிரஸைப் பலவீனப்படுத்த நான் தேவையா? ராகுல் காந்தியே அந்த வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறார். அப்படி இருக்கும் போது நான் அதற்குத் தேவையா? ராகுல் காந்தி இப்போது பாத யாத்திரை செல்கிறார். எதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் இதையெல்லாம் செய்து வருகிறார். என்ன நடக்கும் பார்க்கலாம். வாழ்த்துகள்" என்றார்.

பாஜக மீது அட்டாக்
தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் ரெய்டுகள் குறித்துப் பேசிய அவர், "ஒவ்வொரு நாளும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்கிறார்கள். நாடு முழுவதும் இதுவரை 285 எம்எல்ஏக்கள் வாங்கப்பட்டுள்ளனர். இதற்காக 7 முதல் 8 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளனர். இதைத்தான் பாஜக செய்து வருகிறது. எம்எல்ஏக்களை வாங்குவதில் பாஜக காசை செலவழித்தால் நாடு எங்கிருந்து வளர்ச்சி அடையப் போகிறது.

தனித்து போட்டி
2024 தேர்தலில் பாஜகவை எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரள வேண்டும் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரைத் தனியாகப் போட்டியிடுவதைச் சரியாக இருக்கும் என்பேன். கூட்டணிகள் மற்றும் இடப்பங்கீடு குறித்து எனக்குப் புரியவில்லை. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மூலம் நாடு முன்னோக்கிக் கொண்டு செல்லாது. அதற்கு 130 கோடி இந்தியர்கள் ஒன்று சேர வேண்டும்.

புரியவில்லை
நான் யாருக்கும் எதிரானவன் இல்லை. ஆனால் இந்த கூட்டணி அரசியல் எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ஒரு சிறந்த பள்ளி அல்லது சிறந்த சாலைகள் அல்லது சிறந்த மருத்துவமனை வேண்டும் என்றால் என்னை அழைக்கவும்.. ஏனென்றால் நான் ஒரு ஐஐடி பொறியாளர், என்னால் இது முடியும். ஆனால் இந்த கூட்டணி, இடப்பங்கீடு எல்லாம் எனக்குப் புரியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications