இன்னும் எத்தனை காலம் போராடுவீர்கள்? மக்கள் ஏன் பாதிக்க வேண்டும்? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: போராட்டம் நடைபெறும் இடங்களில் வசிக்கும் மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் விவசாயிகள் சாலைகளை மறித்துள்ளதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இன்னும் எத்தனை காலம் தான் சாலைகளை மறித்து போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகரில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் நான்கு மாதங்களைக் கடந்தும் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.
டிசம்பரில் நிலவிய கடும் குளிர், தற்போது நிலவும் வெயில் ஆகியவற்றைக் கடந்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், நொய்டாவில் வசிக்கும் பெண் ஒருவர் விவசாயிகள் போராட்டம் காரணமாகத் தான் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தின்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடங்களில் பின்பற்றப்படுவதில்லை எனத் தனது மனுவில்

மக்கள் பாதிக்க வேண்டுமா
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "உங்களுக்கு மத்திய அரசின் குறிப்பிட்ட சட்டத்தில் உடன்பாடு இல்லை என்பதற்காக மற்றவர்களும் பாதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல, நீங்கள் அவர்களின் வழக்கமான வாழ்க்கை முறையைத் தடுக்கிறீர்கள்" என்றனர். மத்திய அரசு தற்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் எனவே இந்த வழக்கை இரண்டு வாரங்கள் ஒத்தி வைக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் ஆஜரதான துஷார் மேத்தா கேட்டுக்கொண்டார்.

எத்தனை காலம்
இதற்கு நீதிபதிகள் கூறுகையில், "நீங்கள் கேட்கும் நேரத்தை நாங்கள் தருகிறோம் ஆனால், எங்கள் கவலை ஒன்றுதான். நாட்டில் பொதுமக்களுக்குப் போராட உரிமை உள்ளது. ஆனால், பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் சாலைகளை மறித்துப் போராடும் போக்குதான் எங்களைக் கவலை கொள்ளச் செய்கிறது. இன்னும் எத்தனை காலம் தான் சாலைகளை மறித்து போராட்டம் நடத்தப் போகிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினர்.

வழக்கு ஒத்தி வைப்பு
மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில் போராட்டத்தைத் தொடர்வது என்பது சரியான யோசனையாக இருக்காது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் மே மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications