"விமான டிக்கெட் கட்டணங்களை கட்டுப்படுத்த முடியாது.." கைவிரித்த மத்திய அரசு! பொதுமக்கள் அதிர்ச்சி
டெல்லி: இண்டிகோ விமானங்கள் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டபோது நாடு முழுக்க விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்த நிலையில், விமான டிக்கெட்களுக்கு உச்சவரம்பைக் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்குப் பதிலளித்த விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, உச்சவரம்பைக் கொண்டு வரச் சாத்தியமே இல்லை எனப் பதிலளித்தார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
இம்மாதத் தொடக்கத்தில் இண்டிகோ சேவை முடங்கியதால் நாடு முழுக்க விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் விலையைத் தாறுமாறாக உயர்த்தியது. பல ரூட்களில் வழக்கத்தை விடப் பல மடங்கு அதிக விலைக்கு விமான டிக்கெட்கள் விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இண்டிகோ
நேரடியாக மத்திய அரசு தலையிடும் அளவுக்கு நிலைமை மோசமானது. இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய அரசு, டிக்கெட் உச்சவரம்பை நிர்ணயம் செய்தது. இதற்கிடையே ஆண்டு முழுக்க விமான டிக்கெட்களுக்கு உச்ச வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே விமான டிகெக்ட்களுக்கு உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தனி நபர் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
இதற்கு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதிலளித்தார். அப்போது நாடு முழுவதும் விமானக் கட்டணங்களுக்கு வரம்பு நிர்ணயம் செய்வது சாத்தியமில்லை என அவர் தெரிவித்தார்.. விமானத் துறை என்பது deregulated, அதாவது மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்காது என்பதைச் சுட்டிக்காட்டிய ராம் மோகன் நாயுடு, இதன் மூலம் பயணிகளுக்கே அதிக நன்மை கிடைக்கும் எனக் குறிப்பிட்டார்.
மத்திய அரசு விளக்கம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பொதுவாகப் பண்டிகைக் காலங்களில் மட்டும் டிக்கெட் ரேட் உயரும். ஏனென்றால் அப்போது குறிப்பிட்ட ரூட்களில் தேவை அதிகரிப்பதால் கட்டணங்கள் உயரும். இந்த ஏற்ற இறக்கங்கள் தற்காலிகமாக மட்டும் இருக்கும்.. விமான டிக்கெட்களுக்கு ஆண்டு முழுவதும் கட்டண வரம்பு நிர்ணயம் சாத்தியமில்லை. தேவையும் சப்ளையும் தான் விமானக் கட்டணங்களைத் தீர்மானிக்கிறது.
விமான துறையில் வளர்ச்சியைக் கொண்டு வரவே இதில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. உலகெங்கும் எந்த நாடுகளில் எல்லாம் விமானத் துறை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதோ.. அந்த நாடுகளில் தான் விமானத் துறை மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளன. கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது தான் பல நிறுவனங்கள் உள்ளே வரும். அது போட்டியை அதிகரிக்கும். போட்டி இருந்தால் எப்போது அது மக்களுக்கே நன்மையைக் கொடுக்கும்.
அதிகாரம் இருக்கு
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சி அடைய வேண்டுமானால், அதிக நிறுவனங்கள் சந்தையில் நுழைய வேண்டும். விமான துறையில் எந்தவொரு டிக்கெட் உச்சவரம்பு உட்பட கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே பல நிறுவனங்கள் இதில் உள்ளே வரும். அதேநேரம் இதில் நிறுவனங்களுக்கு முழுச் சுதந்திரம் இல்லை. தேவைப்படும்போது தலையிட்டு உச்சவரம்பை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளன. தேவைப்படும் சூழல்களில் மட்டும் மத்திய அரசு தலையிட்டுச் சிக்கலைச் சரிசெய்யும்" என்றார்.
மேலும், கொரோனா நெருக்கடி, மகா கும்பமேளா, பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட சமயங்களில் டிக்கெட் விலை உயர்ந்தபோது மத்திய அரசு அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், விமானக் கட்டணங்களைக் கட்டுப்படுத்துவது மட்டும் தீர்வு இல்லை என்ற அவர், நீண்டகாலத் தீர்வுக்காக முயற்சிகள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
டிக்கெட் விலை குறைவு
தொடர்ந்து பேசிய அவர், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால் பல ஆண்டுகளாக இந்தியாவில் விமான டிக்கெட் விலை குறைந்தே இருக்கிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை விடவே இந்தியாவில் விமான டிக்கெட் விலை அதிகளவில் குறைந்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications