டெல்லி: போராடும் விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் - வேளாண் அமைச்சகம் கடிதம்
டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் விவசாய சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
டெல்லி: டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் விவசாய சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை தொடரும் நிலையில் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேளாண்துறையில் மூன்று புதிய சட்டத் திருத்தங்களை ஆளும் பாஜக அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020, வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களும் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்கள் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.
வேளாண் மசோதாக்கள் பற்றி எதிர்க்கட்சிகள் பொய் சொல்லிவருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி வந்தார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ஏற்க பல மாநில விவசாயிகள் தயாராக இல்லை. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர்.
மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாக கடும் குளிர், மழை, வெயில் என்று பாராமல் போராடினர். விவசாயிகளின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறப்போவதாக பிரதமர் மோடி அறிவித்தார். டெல்லி சலோ என்று தொடங்கிய போராட்டம் ஓராண்டுகளை நிறைவடைந்த நிலையில் பல உயிர்களை தியாகம் செய்து தங்களின் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர் விவசாயிகள். நாடாளுமன்றத்திலும் இந்த சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
பலநூறு விவசாயிகளின் உயிர்கள் இதில் பலியாகியுள்ளன. விவசாயிகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுடன் வேலை வழங்க வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதிலளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் " வேளாண் போாரட்டத்தில் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை. அவ்வாறு உயிரிழந்ததாக அரசின் பதிவேட்டில் இல்லை'' எனக் கூறினார்.
வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டாலும் போராட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் விவசாய சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை தொடரும் நிலையில் மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு ஏற்கும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும் என விவசாய சங்க தலைவர் குர்நாம் சிங் கூறியுள்ளார். விவசாயிகளின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெரும் முன் போராட்டத்தை கைவிட்டால் அது எங்களுக்கு சிக்கலாகும் என குர்நாம் சிங் தெரிவித்துள்ளார். விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை அரசு அறிவிக்க வேண்டு என டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்பின் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்கு பின் தெரிவித்தனர்.