செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு கிரிக்கெட் மைதானம் தான் வேண்டும்! தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம்
டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் தமிழக அரசை இன்று உச்சநீதிமன்றம் விளாசியது. இந்த வழக்கில் வழக்கில் 2000க்கும் அதிகமானவர்கள் மீது குற்றவாளிகளாகவும்,500 பேர் சாட்சிகளாகவும் சேர்க்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் விசாரணைக்கு நீதிமன்ற அறை போதாது. பெரிய கிரிக்கெட் மைதானம் தான் வேண்டும் என்று விளாசியது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து அமமுக சென்று அதன்பிறகு திமுகவில் இணைந்தவர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடந்த 2011 - 15 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பணம் வாங்கி பணி ஆணைகளை வழங்கிய புகாரில் தமிழக போலீஸ், 2018ல் மூன்று வழக்குகளை பதிவு செய்தது. அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தது. செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
15 மாத சிறைவாசத்துக்கு ம் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து மீண்டும் அமைச்சரானார். ஆனால் அவர் அமைச்சரானதை உச்சநீதிமன்றம் கண்டித்தது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் ஜாமீன் ரத்து செய்ய உத்தரவிடுவோம் என்று கூறியது. இதையடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் 27ல் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தான் பணம் வாங்கி அரசு வேலை தருவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிராக ஒய் பாலாஜி என்பவர் தொடர்ந்த மனு, வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று வித்யகுமார் தாக்கல் செய்த மனு, கடந்த 2022 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில பத்திகளை நீக்க வேண்டும் எனக்கூறி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த்,ஜாய் மால்யா பக்சி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை இழுத்தடிக்க, 2,300 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனரா? வழக்கை இழுத்தடிக்க தமிழக அரசு முயல்கிறதா? என்ற கேள்விகளை எழுப்பியது. அதேபோல் இன்றும் உச்சநீதிமன்றம் தமிழக அரசை சாடியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‛‛வழக்கில் 2000க்கும் அதிகமானவர்கள் குறு்றம்சாட்டப்பட்டுள்ளனர். 500க்கும் அதிகமான சாட்சிகள் உள்ளன. இது இந்தியாவின் மிகவும் பிரபலமான விசாரணை வழக்காக இருக்கும். இந்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் அறை போதுமானதாக இருக்காது. குற்றம்சாட்டப்பட்டவரின் இருப்பை காட்ட ஒரு கிரிக்கெட் மைதானம் கூட தேவைப்படலாம்'' என்று கடிந்து கொண்டார்.
மேலும் பிரதான வழக்கில் எத்தனை பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது? பணம் எப்படி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது? என்பது பற்றிய விவரங்களை வழங்க வேண்டும். வேலைக்கு பணம் பெற்ற வழக்கை எவ்வாறு நடத்தப்போகிறீர்கள்? என்பது பற்றிய தெளிவான திட்டத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த வழக்கை எவ்வளவு காலத்தில் விசாரித்து முடிக்கப்படும் என்பது பற்றியும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்க வேண்டும்'' என்று கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications