லோக்சபா தேர்தல் 2024: காங். தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆயுதமாகிறதா ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை?
டெல்லி: லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆயுதமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை உருவெடுத்து வருகிறது.
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2011-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். ஆனால் பிரதமர் மோடி இதனை ஒருபோதும் செய்யமாட்டார். பிரதமர் மோடிக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் ஓபிசியினர் மீது அக்கறை இல்லை. ஆனால் காங்கிரஸ் அரசு நிச்சயம் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடும் என்றார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த கணக்கெடுப்பு விவரம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. 2014-ம் ஆண்டு முதலே இந்த கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இன்னமும் மத்திய அரசு இதனை நிறைவேற்றவில்லை என சுட்டிக்காட்டி இருந்தார்.
இதேபோல சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஓபிசி-க்கான இடஒதுக்கீடு தொடர்பாக நாங்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது ஒடுகப்பட்ட மக்களைப் பாதிக்க செய்கிறது என கூறியிருந்தார்.
பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார், ஏற்கனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கைகளை அம்மாநிலத்தில் மேற்கொண்டுள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆதரிக்கிறார். பீகார் மாநில பாஜகவும் கூட ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

பீகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், பீகாரில் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்கிறார். உத்தரப்பிரதேச சட்டசபையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றன. இந்த மாநிலங்களும் இடஒதுக்கீடு விவகாரத்தில் உறுதியாக உள்ளன. இந்த கோரிக்கையே பாஜகவுக்கு எதிராக 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆயுதமாகவும் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications